இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் பிரதான தொழில் விவசாயமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையும் தாமதம் அடைந்துள்ளது. லத்தூர் அருகில் விவசாயி ஒருவர் உழவடிக்க இருந்த இரண்டு காளை மாடுகளில் ஒன்று இடி தாக்கி இறந்ததால், தன்னுடைய மனைவியை கலப்பையில் பூட்டி உழவடித்த வீடியோ, வைரலாகி கிருக்கிறது.
லத்தூரில் இருந்து 63 கி.மீ தொலைவில் உள்ள பொம்பாலியில் விவசாயி காஷிநாத் கெய்க்வாட், பருவமழை தொடங்கும் முன்பு தனது 8 ஏக்கர் நிலத்தை உழ நினைத்தார். ஆனால் அவரிடம் இருந்த இரண்டு காளைகளில் ஒன்று மின்னல் தாக்கி இறந்துவிட்டது.
ஏற்கெனவே கடன் சுமை அதிகமாகி இருக்கும் நிலையில், புதிய காளை மாடு வாங்க அவரிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று திகைத்துக்கொண்டிருந்த கெய்க்வாட்டிற்கு அவர் மனைவி ஹவுசபாய் வழிகாட்டினார்.
தான் ஒரு காளைமாட்டிற்கு பதில் கலப்பையை இழுப்பதாகத் தெரிவித்தார். அவர்கள் தோட்டத்தில் உழவடித்த காட்சி, சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு காளை மாட்டுடன் சேர்ந்து ஹவுசபாய் கலப்பையைக் கழுத்தில் மாட்டி இழுத்துச் சென்றதைப் பார்த்து அனைவரும், அவர்கள் மீது இரக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அதை விரைவாகப் பெரிதாக்கி, ஒரு விவசாயியின் குடும்பத்தை எப்படி இந்த நிலைக்குத் தள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.