ஒரு உற்பத்தியாளராக இருக்கிற நம் விவசாயிகளை எப்படி ஒரு வியாபாரியாக, ஒரு ஏற்றுமதியாளராக மாற்றுவது? என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது தான், நம் வேதியியல் விஞ்ஞானிகள் நமக்கு நிறைய யோசனைகளைக் கொடுத்தார்கள். இந்த யோசனைகளை நம் விவசாய சமூகத்திடம் கொண்டுப் போய், அவர்களை உற்பத்தியாளரிலிருந்து ஒரு வியாபாரியாகவும், ஏற்றுமதியாளராகவும் கொண்டு போவதுதான் மாவட்ட நிர்வாகத்தின் விருப்பம். அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுங்கள். தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய விவசாய நிலத்தில் போய் அதைச் செயல்படுத்துங்கள். நம்முடைய விவசாயிகளை களத்தில் போய் பார்க்கும்போது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. நீங்களும் நிறைய ஊக்குவிக்க வேண்டும். ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு சொல்லும்போது அது இன்னும் எளிதாகச் சென்றடையும்.

அதனால், நீங்கள் உங்களது அனுபவங்களை மற்ற விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். எனவே, அடுத்தடுத்த கூட்டங்களில் இதுபோல ஊக்கமளிக்கும் விவசாயிகளை அழைத்து, அவர்களின் உரைகளையும் கேட்க நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார். முன்னதாக, வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ள உயர் விளைச்சல் ரகங்களான வம்பன் 11 ரக உளுந்து, நெல் கோ 51 ரக நெற் பயிர்களையும் பார்வையிட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ், அதன் உற்பத்தி செயல்முறைகளையும் கேட்டறிந்து வேளாண்மை துறைக்கு விதை உற்பத்தி செய்யவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, காட்டு பன்றிகளின் சேதாரத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் `காட்டுப் பன்றி விரட்டி’ செயல் முறை விளக்க திடலையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, வேளாண்மை இணை இயக்குநர் ஸ்ரீ வித்யா உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.