Business
oi-Vigneshkumar
சென்னை: நமது நாட்டில் சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. அதேநேரம் இன்னும் சிலர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளையும் சொந்தமாக வாங்கிக் கொள்கிறார்கள். வாடகை வருமானம், நீண்ட கால செல்வத்தை உருவாக்குவது இதன் நோக்கமாக இருக்கிறது. அதுபோல வாடகைக்கு வீடு வாங்குவோர் வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
நீண்டகால முதலீடு, வாடகை வருமானம் அல்லது எதிர்கால குடும்பத் தேவைக்காக பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக ஏற்கனவே பரம்பரை பரம்பரையாக நிலம் வைத்திருப்போர், வீடுகளை கட்டி வாடகைக்கு விடுவதையும் வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

வீடுகள்
இதுபோல ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது சில முக்கிய விதிமுறைகளை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில் தவறான வரி கணக்கீடு அல்லது வருமான வரித்துறையின் நோட்டீஸ் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பவர்களுக்கு கவனிக்க வேண்டிய முதல் விஷயம், ஒவ்வொரு வீடு குறித்த தகவல்களையும் சரியாக குறிப்பிடுவது தான். எந்த வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்.. எந்த வீட்டை வாடைக்கு விட்டுள்ளீர்கள் என்பதை துல்லியமாக சொல்ல வேண்டும். அதை பொறுத்தே அதன் வருமானம் கணக்கிடப்படும்.. எந்தெந்த வரி சலுகைகளை பெற முடியும் என்பதும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த விவரங்களை தவறாக பதிவு செய்தால் வரி கணக்கீட்டில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆவணங்கள்
அதேபோல் வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்பே அனைத்து சொத்து தொடர்பான ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கான வட்டி சான்றிதழ், கடனை தொகை திருப்பி செலுத்திய விவரங்கள், நகராட்சி வரி ரசீதுகள், வாடகை ஒப்பந்தங்கள், வாடகை ரசீதுகள் மற்றும் வாடகை மூலம் கிடைத்த விவரங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஆவணங்களை எல்லாம் எடுத்து வைத்திருந்தால்.. ஈஸியாக வருமான வரியை தாக்கல் செய்யலாம்!
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், “பலரும் வீடு வாங்கும்போது அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது சொதப்பிவிடுகிறார்கள். இதனால் தேவையில்லாத சட்ட சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது” என்றார்.
முக்கியம்
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு வருமான வரி சட்டத்தில் என்ன விதிகள் உள்ளன என்பதை முன்கூட்டியே புரிந்துகொள்வதும், தேவையான ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பதும் முக்கியம். மேலும், உங்களுக்கு இதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் வரி ஆலோசகரின் உதவியை பெறுவதும் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
வருமான வரி நோட்டீஸ்
ரியல் எஸ்டேட் என்பது நீண்டகால செல்வத்தை உருவாக்கும் முக்கியமான முதலீடாக இருக்கிறது. எனவே, சரியான முதலீட்டை தேர்வு செய்வது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சரியான வரி திட்டமிடலும் முக்கியமானது. வரி சலுகைகளை பெறுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல்.. வருமானம், நகராட்சி வரி, கழிவுகளாக கோரக்கூடிய செலவுகள் என அனைத்தையும் முறையாக வைத்து வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். சரியான தகவல்களுடன் வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் வருமான வரித்துறை நோட்டீஸ் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.


