Tamilnadu
oi-Nantha Kumar R
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே விநாயகர் பிரதிஷ்டை விழாவில் பேண்ட் வாத்தியத்தை சூடு செய்யும்போது பெட்ரோல் கேன் வெடித்து சிதறி படுகாயமடைந்த 3 பேரில் 2 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதுபற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 15ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன்பிறகு அந்த சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பேண்ட் வாத்தியங்களுடன் ஆடிப்பாடி பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அப்போது பேண்ட் வாத்தியத்தை சூடு செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த பெட்ரோல் கேன் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் மீது தீ பரவியது.
பனக்கம்பை பகுதியை சேர்ந்த சிவநேசன் (வயது 58), சஞ்சய் ஹரிஹரன் மற்றும் ராகுல் ஆகியோர் மீது தீ பரவியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு 3 பேர் மீதும் பரவிய தீயை அணைத்தனர். அதன்பிறகு அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி சிவநேசன், சஞ்சய் ஹரிஹரண் ஆகியோர் இறந்தனர். ராகுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு சென்று எதிர்பாராத விதமாக பெட்ரோல் கேனில பரவிய தீயில் சிக்கி 2 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.