`வெப்பத்தின் வெறியாட்டம்’ – சமூக மாற்றத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் வித்திட்ட கட்டைக்கூத்து | Kattaikoothu Folk Theatre Spreads Heat Awareness Through Powerful Performance

Spread the love

அசார் சோஷியல் இம்பாக்ட் அட்வைசர்ஸ் நிறுவனமும், எம்.எஸ் . சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய வெப்பத்தின் வெறியாட்டம் கட்டைக்கூத்து நிகழ்ச்சி, வெகு சிறப்பாக நடைபெற்றது.

அசார் சோஷியல் இம்பாக்ட் அட்வைசர்ஸ் என்பது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதித் தாக்கத் துறையில் உள்ள ஒரு புத்தொழில் நிறுவனமாகும். இது பருவநிலை மீள்திறனைக் கட்டமைப்பதிலும், லட்சியமிக்க பருவநிலை நடவடிக்கைகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, பாலின சமத்துவமான உணவு, நிலம் மற்றும் நீர் அமைப்புகளை உருவாக்குவது குறித்த எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சர்வதேச மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் அது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த 45 நிமிட ஒரு “கட்டைக்கூத்து’ நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. திலகவதி பழனி அவர்களின் தலைமையிலான ஸ்ரீ திலகம் கட்டைக்கூத்து குழுவால் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்படும் நாடக நிகழ்ச்சி, நமது காலத்தின் மிக முக்கியமான நெருக்கடிகளில் ஒன்றை மையமாகக் கொண்டுள்ளது.

வடதமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பரிச்சயமான வடிவத்தில் அதாவது வட்டார மொழியில் பாடல், தாள வாத்தியங்கள், விரிவான ‘கட்டை’ அலங்காரங்கள் மற்றும் கூத்துக்கே உரித்தான நீண்ட நேரக் கதை சொல்லும் ஆற்றல் ஆகியவற்றின் மூலம் இந்நாடகம் இந்தக் கதையை விவரிக்கிறது.

கட்டைக்கூத்து என்பது வட தமிழ்நாட்டின் கிராமங்களில் வழக்கில் உள்ள ஒரு பாரம்பர்ய நாடகக் கலையாகும். திறந்தவெளி மேடைகளில் இரவு முழுவதும் நிகழ்த்தப்படும் இக்கலை, வரலாற்று ரீதியாக மகாபாரதம் மற்றும் பிற காவியங்களிலிருந்து கதைகளைத் தழுவி, விவசாயச் சமூகங்களுக்காகவும் அவர்களாலேயே நிகழ்த்தப்பட்டு வருகிறது.

‘வெப்பத்தின் வெறியாட்டம்’ இந்தத் துடிப்பான கலை மரபிலிருந்து ஒரு சமகால காவியத்திற்கு வெப்பத்தின் கதை. புழுக்கமான வகுப்பறையில் கவனம் செலுத்த முடியாத குழந்தை, தகரக் கூரை சமையலறையில் நெருப்பின் அருகே சமைக்கும் தாய், அபாயகரமான பிற்பகல்களில் உழைக்கும் விவசாய மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் என சாதாரண மக்களின் வாழ்க்கையை இந்த நாடகம் பின்தொடர்கிறது.

காலநிலை மாற்றம் குறித்த தரவுகளும் எச்சரிக்கைகளும் அறிக்கைகளையும் தலைப்புச் செய்திகளையும் தாண்டி அரிதாகவே பரவுகின்றன. கட்டைக்கூத்து வெப்பத்தின் பெரும் சுமையைச் சுமக்கும் சமூகங்களிடம், அவர்களின் சொந்த மொழி, பேச்சுவழக்கு மற்றும் தாளத்தில் நேரடியாகப் பேசுகிறது. நெருக்கடியானது முன்வைக்கப்படுவதற்குப் பதிலாக நிகழ்த்தப்படும்போது, பார்வையாளர்கள் வெப்பத்தைப் பற்றி அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், மேடையில் தங்கள் சொந்த வாழ்க்கையையும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். 

வெப்பத்தின் வெறியாட்டம் விழிப்புணர்வு பயணம் 

இந்தச் சுற்றுப்பயணம் 28 ஜூலை 2026 அன்று ராணிப்பேட்டையில் உள்ள வேதவல்லி வித்யாலயாவில் ஒரு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தற்போது, தமிழ்நாட்டின் மிக அதிக வெப்பநிலையைப் பதிவுசெய்யும் உட்புற மாவட்டங்களின் பகுதியில் அமைந்துள்ள ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இது நடைபெற்று வருகிறது. இந்தக் குழு மொத்தம் ஏழு பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது .இதில் பார்வையாளர்களாகவும் கலைஞர்களாகவும் குழந்தைகள் மையமாக உள்ளனர்.

கூத்தின் நாயகி, கலைக்குழுவின் தலைவி!

திலகவதி பழனி முதல் பெண் கட்டைக்கூத்துக் கலைஞர் மற்றும் வட தமிழ்நாட்டின் கிராமிய நாடக மரபை முன்னெடுத்துச் செல்லும் ‘ஸ்ரீ திலகம் கட்டைக்கூத்து குழு’வின் தலைவர் ஆவார். அந்த வாக்கியமே குறிப்பிடத்தக்கது. கட்டைக்கூத்து அதன் முந்நூறு ஆண்டுக்கால வரலாற்றில் பெரும்பாலான காலம் ஆண்களின் மரபாகவே இருந்து வந்துள்ளது.

கதாநாயகி பாத்திரங்கள் ஆண்களாலேயே நடிக்கப்பட்டன. அதன் மேடைகள், சுற்றுப்பயணங்கள் மற்றும் குழுக்கள் ஆண்களாலேயே வழிநடத்தப்பட்டன. அதன் எத்தனிப்பை நாம் 2024 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் பாரி இளவழகனின் ‘ஜமா’ திரைப்படத்தில் கண்டிருப்போம்.

திலகவதி சிறுவயதிலிருந்தே இக்கலையில் பயிற்சி பெற்று, அதன் கடினமான பாடல், நடனம், தாள வாத்தியங்கள் சார்ந்த நடிப்பு மற்றும் இரவு முழுவதும் நீடிக்கும் சகிப்புத்தன்மை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று, பெண் கலைஞர்களே அரிதாக இருக்கும் ஒரு துறையில், அதிலும் குறிப்பாக பெண் குழுத் தலைவர்களே அரிதாக இருக்கும் ஒரு சூழலில், தனது சொந்தக் குழுவை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்தார். அவரது கலைப்பயணம், மரபின் மீதான மரியாதைக்கும், மேடையில் பெண்களுக்கும், இன்றைய காலகட்டத்தின் கதைகளுக்கும் அது இடமளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுக்கும் இடையிலான ஒரு தொடர்ச்சியான போராட்டமாகும்.

திலகவதியை பொறுத்தவரை, இது மரபிலிருந்து விலகுவதல்ல, மாறாக அதன் தொடர்ச்சியாகும்: கூத்து எப்போதுமே தனது பார்வையாளர்களுக்கு அவர்களின் உலகின் மிகப்பெரிய கதைகளைச் சொல்லி வந்துள்ளது, இன்று மாறிவரும் பருவநிலையை விடப் பெரிய கதை எதுவும் இல்லை என்ற அர்ப்பணிப்புடன் இருக்கிறார். குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது, அவர்களைப் பார்வையாளர்களாகக் கருதாமல் கலைஞர்களாக மேடையில் நிறுத்துவது, கட்டைக்கூத்து ஒரு வாழும் மரபாக இருப்பது, தமிழ் நாட்டுப்புறக் கலையில் பெண்களின் தலைமைத்துவம், மற்றும் பருவநிலை. இயக்கத்திற்கு ஏன் கலைஞர்கள் தேவை… ஆகியவற்றை விளக்குவதாக இந்த நாடகம் அமைந்திருந்தது. 

கூத்தின் கருத்து 

ஆன்மிக கதைகளையும் கருத்துகளையும் எடுத்து வைக்கும் வண்ணம் இருந்த கட்டைக்கூத்தை விழிப்புணர்வு நாடகமாக விளக்கிய விதம் நகைச்சுவை தன்மையுடன் அமைந்திருந்தது.

அந்த நகைச்சுவையின் வாயிலாகவும் கலையின் வாயிலாகவும் எடுத்து வைக்கப்படும் கருத்துக்கள் எளிமையாக சமூகத்தின் மனதை தொடும் வண்ணம் இருக்கின்றன. நாடகத்தில் குழந்தைகளின் பங்கு பெரும் பங்காகவும் பெண்கள் நாடகத்தின் முதுகெலும்பாகவும் அமையப் பெற்றிருந்தனர்.

அதீத வெப்பத்தின் தாக்கத்தால் சமூகத்தின் நிலை, வெப்பத்திற்கான காரணம் போன்றவற்றை எடுத்துரைப்பதாக நாடக அமையப்பெற்று இருந்தது. சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டுவது, பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது, அதீத வாகன பயன்பாடு போன்றவற்றை குறைப்பதற்கான விழிப்புணர்வுடன் நாடகம் தொடங்கியது. கார்ப்பரேட் கம்பெனியாக வேடமிட்டு இருந்தவர் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியே சொகுசு வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது என்று கூறிய போதிலும், அக்னி தேவனைப் போல் வேடமிட்டு இருந்தவர் இந்தச் சமூகம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் தான் மக்களுக்கு ஏற்படுத்தும் இன்னல்களுக்காக வருந்தும் காட்சிகளாக நாடகம் அமைந்தது.

இந்த சமூகத்திடம் மாசுபாடுகளை தவிர்க்க அக்னி தேவன் வேண்டியதாகவும் இருந்தது. இறுதியாக வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம். நாமும் வளர்ப்போம்… நம் நண்பர்களையும் வளர்க்க வைப்போம் என்ற கருத்தையும் இந்நாடகம் எடுத்து வைத்தது. கட்டைக்கூத்துக்கே உரிய இசை மற்றும் நடன வட்டார வழக்கு பாணியில் ஏற்படுத்தப்பட்ட இந்த நாடகம் மனதை தொட்டு மாற்றத்தை ஏற்படுத்தும் விதையின் வித்தாகவே அமைந்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *