International
oi-Halley Karthik
பெர்லின்: இந்தியாவில் உள்ள வேலை சூழல்.. செக்கு மாடு மாதிரி இருக்கும். ஆனா! ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் அப்படி கிடையாது. ஜெர்மனி வாழ் இந்தியர் ஒருவர் தனது வேலை குறித்து பகிர்ந்துள்ள வீடியோ சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் வேலை செய்வதும், அடுப்பில் வைத்த இட்லி குண்டானை கழுவுவதும் ஒன்னுதான் என்று சொல்வார்கள். என்ன கழுவினாலும் இட்லி குண்டான் கரி போகாது. அதுபோலதான்.. மாடு மாதிரி வேலை பார்த்தாலும் இந்தியாவில் முன்னேறுவது ரொம்ப கஷ்டம். இப்படி இருக்கையில்தான் ஜெர்மனி வாழ் இந்தியரின் வீடியோ பரவலாக ஷேராகி வருகிறது.

ஜெர்மனியில் வாழும் மோஹித் என்கிற இந்திய இளைஞர், திங்கட்கிழமை மாலை 5 மணி ஆவதற்கு முன்பே ஊழியர்கள் அனைவரும் தங்களின் வேலைகளை முடித்துவிட்டு சென்றதால் காலியாக கிடந்த அலுவலக பகுதியை அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில் காட்டியிருக்கிறார். 4.58 மணிக்கே ஊழியர்கள் அனைவரும் கிளம்பிட்டனர். அலுவலக சேர்கள் காலியாக இருக்கின்றன.
வீடியோவை பகிர்ந்துள்ள மோஹித், இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே உள்ள வேலை கலாச்சாரத்தின் வித்தியாசத்தை பாருங்க என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், வேலை என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதிதான். ஆனால், அது மட்டுமே வாழ்க்கை கிடையாது. அது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்தான் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். வேலை நேரம் முடிந்த பிறகும் தேவையின்றி அலுவலகத்தில் தங்கியிருக்கும் இந்திய வேலை கலாச்சாரத்துடன் அவர் இதனை ஒப்பீடு செய்திருக்கிறார்.
இந்த வீடியோவை இந்தியர்கள் பலரும் வரவேற்றிருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளின் வேலை கலாச்சாரத்தையும் அவர்கள் பாராட்டியிருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஊழியர்கள் அதிக நேரம் உழைக்கிறார்கள். வாரத்திற்கு 50-60 மணி நேரம் வரை இந்தியர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். ஜெர்மனியில் வாரத்திற்கு வேலை நேரம் 36.2 மணி நேரமாக இருக்கிறது. அவர்கள் குறைந்த நேரத்தில் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.