தொடரின் தொடக்கத்தில் வரிசையாக வெல்வதும் இறுதியில் தோல்விமுகத்தோடு தத்தளிப்பதும் ராஜஸ்தானுக்கே கைவந்த கலை.
முதல் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்றிருந்த ராஜஸ்தான், அடுத்து வந்த ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. அதிலும் டெல்லிக்கு எதிரான இந்தத் தோல்வி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாததாக மாறி இருக்கிறது.
எப்போதுமே சிறப்பாக ஆடும் வைபவ் சூர்யவன்சி 219 ஸ்ட்ரைக்ரேட்டில் சேர்த்த 46 ரன்கள், எப்போதாவது சிறப்பாக ஆடும் கேப்டன் ரியான் பராக் அடித்த அதிவேக அரைசதம், அணிக்கு ஆங்கரிங் ரோலை இத்தொடரில் செய்து கொண்டிருக்கும் த்ருவ் ஜுரேலின் அரைசதம் – இவை அனைத்தையுமே அர்த்தமில்லாதது போல் ஆக்கி விட்டது அக்ஸர் படேல் எடுத்த ஒரே ஒரு முடிவு.

இத்தொடர் முழுவதுமே பல சந்தர்ப்பங்களில் அக்ஸர் எடுத்த முடிவுகள் விவாதத்திற்கு உள்ளாகின. இப்போட்டியிலோ மிடில் ஓவரில் ஸ்டார்க்கிற்கு இடைச்சொருகலாக அக்ஸர் படேலால் தரப்பட்ட ஒரே ஒரு ஓவர் தான் சகலத்தையும் மாற்றியது….
நியூபாலில் ஸ்டார்க்கின் ஸ்பெல் சிறப்பானதாக இல்லை. விக்கெட் வீழ்த்தாதது மட்டுமல்ல இரு ஓவர்களிலேயே 28 ரன்களை வாரி வழங்கி இருந்தார். ஸ்டார்க் மட்டுமல்ல “எங்கிடி தவிர்த்து யார் வந்தாலும் அடிப்போம்!”, என்ற மனப்பான்மையோடே பவர்பிளேயை ராஜஸ்தான் ராயல்ஸ் அணுகியிருந்தது. 12 என்ற ரன்ரேட்டையும் தாண்டி 75 ரன்களை பவர்பிளே ஓவர்கள் பார்த்து விட்டது.