ஸ்டாலின் திரும்பிப் பார்த்தா..என்ன யாரையுமே காணோம்! சல்லி சல்லியாய் உடைந்த திமுக கூட்டணி! என்னாச்சு? | DMK Alliance Shrinks as MDMK Officially Quits Coalition After Polls

Spread the love

Tamilnadu

oi-Rajkumar R

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளின் பட்டியலில் மதிமுகவும் இணைந்துள்ளது. தேர்தலுக்கு முன் 26 கட்சிகள் மற்றும் சாதி, சமூக அமைப்புகள் திமுக கூட்டணியில் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிகை வெகுவாகக் குறைந்துள்ளது.

சென்னையின் எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகம்’ வளாகத்தில், கட்சியின் உயர்நிலைக் குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற்றன. அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டங்களில், பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேநேரத்தில், கட்சியின் பொதுக்குழு மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பங்கேற்கவில்லை.

mk stalin DMK MDMK

மதிமுக

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானமாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. வரவிருக்கும் அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதிமுகவின் இந்த முக்கியக் கூட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துரை வைகோ பங்கேற்காதது. உயர்நிலைக் குழு மற்றும் பொதுக்குழு ஆகிய இரு கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

துரை வைகோ

கட்சித் தலைமைக்கும், துரை வைகோவுக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், அதனால்தான் அவர் இந்தக் கூட்டங்களை புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதிமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில், சீர்காழி தொகுதி உறுப்பினர் செந்தில்செல்வன் ஏற்கனவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

திமுக

மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், கட்சியின் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுவும் கட்சிக்குள் நிலவும் உள்கட்சி குழப்பத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திமுக தலைமையிலான கூட்டணியில் அரசியல் கட்சிகள், சாதி மற்றும் சமூக அமைப்புகள் என மொத்தம் 26 அமைப்புகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தேர்தலுக்குப் பிறகு அந்த கூட்டணி படிப்படியாக சுருங்கி வருகிறது.

திமுக கூட்டணி

ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியுள்ளன. தற்போது மதிமுகவும் வெளியேறியிருப்பதால், திமுக கூட்டணி மேலும் பலவீனமடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2026 தேர்தல்

2026 தேர்தலின் போது திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம்,கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், ஆகியவை இருந்தன.

உடைந்த கூட்டணி

இதில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக வெளியேறிவிட்டன. தற்போது திமுக கூட்டணியில், தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம், எஸ்.டி.பி.ஐ., ஆகியவை மட்டுமே உள்ளன. இதில் எந்த கட்சிக்குமே தனி வாக்கு வங்கி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன்னரே வேல்முருகனின் தவாக திமுக கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *