கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் விதமாக கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ” இந்தியாவிலேயே இதுவரை நடக்காத நிகழ்வாக கரூரில் நடந்திருக்கிறது. கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களின் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் உதவி செய்ய வேண்டியது கடமை. தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.

ஆனால், அதை ஏன் யாரும் கேள்வி கேட்டு தடுத்து நிறுத்தவில்லை. நாங்கள் சாஃப்ட்டாக ஆட்சி நடத்துகிறோம். அதனால் தான் ஈஸியாக கேள்வி கேட்கிறார்கள். கடந்த காலங்களில் பல்வேறு துறைகளில் முறைகேடாக தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்கிய நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது, தற்போதைய அரசு கரூரில் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக தற்காலிக அடிப்படையில் அரசு வேலைகளை வழங்கியிருப்பது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை. அது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கை” என்றார்.