பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகள், காசா எல்லையருகே 370-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நோவா இசை விழாவிலும், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதிகளிலும்தான் நடந்துள்ளன. ஆனால், இந்த வன்முறை அத்துடன் நிற்கவில்லை. காசாவிற்குள் கடத்திச் செல்லப்பட்டு, சுரங்கங்களிலும், ரகசிய வீடுகளிலும் மாதக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருந்தபோதும் பாலியல் வன்முறை தொடர்ந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
விடுவிக்கப்பட்ட 17 வயது முன்னாள் பிணைக்கைதியான அகம் கோல்ட்ஸ்டைன், “உங்கள் உடலின் மீதும், அதை எப்படிப் பராமரிப்பது என்பதன் மீதும் உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாதபோது, சின்ன சின்ன விஷயங்கள்தான் உங்களை உடைத்துவிடும்” என்று சிறைவாசத்தின் உளவியல் பாதிப்பைப் பற்றி விவரித்தார்.

நோவா விழாவிலும், கிப்புட்ஸிம் பகுதிகளிலும், ராணுவத் தளங்களிலும் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டதாகவோ அல்லது கேட்டதாகவோ பல சாட்சிகள் கூறியுள்ளனர். பகுதி ஆடையுடனோ அல்லது பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையிலோ கண்டெடுக்கப்பட்ட உடல்கள் பற்றியும் பல வாக்குமூலங்கள் குறிப்பிடுகின்றன. உயிர் தப்பிய ஆண் ஒருவர், தன்னைத் தாக்கியவர்கள் ஒரு “செக்ஸ் பொம்மை” போல நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விசாரணையில் ஆவணப்படுத்தப்பட்ட செயல்கள் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைச் செயல்களாக அமைகின்றன என்று ஆணையம் முடிவு கூறியுள்ளது. “பாலியல் வன்முறை என்பது விதிவிலக்கான கொடூரத்துடன் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட உத்தி என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது” என்கிறார் ஆணையத்தின் நிறுவனர் டாக்டர். கோச்சவ் எல்கயாம்-லெவி. “இரண்டு ஆண்டுகளாக, நாங்கள் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கேட்டோம், ஆதாரங்களை மிகக் கவனமாக ஆய்வு செய்தோம், மேலும் புரிந்துகொள்ளவே முடியாத பல கொடூரமான விஷயங்களை எதிர்கொண்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் விசாரணை அமைப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு ஹமாஸ் தரப்பு இன்னும் பதில் ஏதும் அலிக்கவில்லை.