ஹரியானா: தொழிலதிபரைத் தாக்க வந்த ரௌடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!

Spread the love

ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று இரவு ரௌடிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் கிட்டத்தட்ட 60 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின் முடிவில், நான்கு ரௌடிகள் கொல்லப்பட்டனர். மூன்று போலீஸார் காயமடைந்தனர். நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில் குருகிராமின் சுஷாந்த் லோக் பகுதிக்கு தொழிலதிபர் ஒருவரை தாக்க ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமான நபர்கள் ஸ்கார்பியோ காரில் வருவதாக, குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், குற்றப்பிரிவின் பல குழுக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தன. போலீஸார் சந்தேகத்திற்குரிய நபர்களைச் சூழ்ந்து கொண்டு, அவர்களை உடனடியாகச் சரணடையுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

இருப்பினும், காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடும் முயற்சியில் போலீஸார் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்குப் பதிலடியாக, சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடிக்கும் முயற்சியில் தற்பாதுகாப்புக்காக போலீஸாரும் சுட்டனர். துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில், வெளிநாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் தீபக் நந்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து ரௌடிகள் குண்டுகள் பட்டு காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஐந்தாவது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 3 போலீஸாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டத்தின்படி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் போலீஸார் கூறினர்.

சம்பவ இடத்தில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைத்துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் இது குறித்து கூறுகையில், “‘போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை சாவடிகளை அமைப்பதற்கு முன்பாகவே, ஆயுதமேந்திய சந்தேகத்திற்குறிய நபர்கள் தொழிலதிபரின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கி இருந்தனர்” என்றார். வெளிநாட்டில் இருந்து இயங்கி வரும் தேடப்படும் பிரபல கும்பல் தலைவன் ஒருவனிடமிருந்து, அந்த தொழிலதிபருக்குத் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் இந்தத் தாக்குதலுக்கு இலக்காக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *