ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! | India LNG Tanker crosses Hormuz: Disha Crosses Strait Safely Following Historic US Iran Peace Accord

Spread the love

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே உலகெங்கும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில், பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. இதற்கிடையே அமைதி ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகிக் கொஞ்ச நேரத்திலேயே இந்தியக் கப்பல் ஒன்று ஹார்முஸை பத்திரமாகக் கடந்துள்ளது.

கடந்த 4 மாதங்களாகவே அமெரிக்கா ஈரான் போர் உலக பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் கச்சா எண்ணெய், எல்பிஜி என அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால் விலைவாசி உயர்ந்து, உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்தன.

India LNG Tanker crosses Hormuz india Iran US Iran peae deal

இந்தியக் கப்பல்

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மாதங்களாக முடங்கிக் கிடந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியச் சரக்குக் கப்பலான திஷா (Disha) நேற்று திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.

‘திஷா’ என்பது LNG எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றிச் செல்லும் ஒரு பிரம்மாண்ட கப்பலாகும். இது இந்திய அரசுக்குச் சொந்தமான ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. கத்தாரில் இருந்து இந்தியாவுக்குத் தேவையான எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வரும் இந்தக் கப்பல், கடந்த மூன்று மாதங்களாகப் பாரசீக வளைகுடா பகுதியில் சிக்கித் தவித்தது.

அமைதி ஒப்பந்தமும் சந்தை மாற்றமும்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் ஆசியப் பங்குச் சந்தைகள் பெரும் எழுச்சியைக் கண்டன. போர் முடிவுக்கு வந்து, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஏன் இந்த ஜலசந்தி முக்கியமானது?

உலக அளவில் எரிசக்தி போக்குவரத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியமான பாதையாகும். உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து இந்தப் பாதை வழியாகவே நடக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40%, இயற்கை எரிவாயுவில் (LNG) 60% மற்றும் எல்பிஜி எரிவாயுவில் 90% இந்தப் பாதை வழியாகவே வருகிறது. எனவே, இந்தப் பாதையில் ஏற்படும் சிறு தடையும்கூட இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் ஏற்படுத்தும்.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, நூற்றுக்கணக்கான கப்பல்கள் இந்தப் பகுதியில் சிக்கிக் கொண்டன. ஏப்ரல் 18ம் தேதி ஈரான் திடீரென இந்தப் பாதையை மூடியது. அப்போது சில இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதனால் பாதுகாப்பு கருதிப் பல கப்பல்கள் தங்களது இருப்பிடத்தைக் காட்டும் ‘டிரான்ஸ்பாண்டர்’ கருவிகளை அணைத்துவிட்டு ரகசியமாகவே பயணித்தன. ஆனால், தற்போது நிலைமை மாறி வருவதால், ‘திஷா’ கப்பல் தனது இருப்பிடத்தை வெளிப்படையாக அறிவித்தபடி துணிச்சலாக ஜலசந்தியைக் கடந்துள்ளது.

13 இந்தியக் கப்பல்கள்

அந்த வளைகுடா பகுதியில் இன்னும் 13 இந்தியக் கப்பல்கள் உள்ளன. ‘திஷா’ கப்பல் ஜூன் 18ம் தேதி குஜராத்தின் தஹேஜ் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா கூறுகையில், “திஷா கப்பல் 62,370 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் பாதுகாப்பாகக் கடந்துவிட்டது. அங்குச் சிக்கியுள்ள மற்ற இந்தியக் கப்பல்களையும் பாதுகாப்பாக மீட்க அரசு தயாராக உள்ளது” என்றார்.

அமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டாலும், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் இன்னும் எச்சரிக்கையுடனேயே உள்ளன. கடந்த மூன்று மாத கசப்பான அனுபவங்களால், போக்குவரத்து முழுமையாக சீரடைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த அமைதி ஒப்பந்தம் நிலைத்திருந்தால் மட்டுமே உலக நாடுகளுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைக்கும்.

ஈரானின் இந்த ஜலசந்தியை மூடும் அதிகாரம், உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்தும் ஒரு ஆயுதமாகப் பார்க்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதித் தீர்வு, உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *