International
oi-Mani Singh S
தெஹ்ரான்: அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தியை மறு அறிவிப்பு வரும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயன்ற வணிக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியுள்ளது. இந்த கப்பலில் 11 இந்தியர்கள் பணியாற்றிய நிலையில் 10 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமாகியுள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் முற்றியுள்ளது. போர் நிறுத்தற்காக போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்கா, அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானும் பதிலடி கொடுத்தது.

இதனால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை 24 மணி நேரத்தில் திறப்பதாக ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்து இருந்தார். ஆனால் இதனை கண்டு கொள்ளாத ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது.
இதனால், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓமன் கடல் அருகே சைப்ரஸ் நாட்டு கொடியுடன் சென்ற வர்த்தக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜிஎப்எஸ் கேலக்ஸி என்ற பெயர் கொண்ட அந்த கப்பல் இந்த தாக்குதலில் பற்றி எரிந்தது. இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்ள கப்பல் சிப்பந்திகள் ஓட்டம் எடுத்தனர். இந்த கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்னும் ஒரு இந்தியரை மட்டும் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர் ஒருவர் மாயமாகி இருப்பதை மத்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், “ஓமன் கடல் பகுதியில் இன்று காலை ஜிஎப்எஸ் வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.