“ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து ‘அன்பே டயானா’ என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
‘குட் நைட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, “ஒரு படைப்பில் அனைவரும் உண்மையான உழைப்பைக் கொடுத்திருந்தால், அது திரையில் அப்படியே பிரதிபலிக்கும் என்று என் குருநாதர் கே.பாலசந்தர் கூறுவார்.
‘அன்பே டயானா’வின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது அந்த உண்மை தெரிகிறது. ‘ஜமா’ போன்ற படங்களை எடுப்பதற்குத் தனி தைரியம் வேண்டும். முன்பு ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கடலோரக் கவிதைகள்’ மற்றும் வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படங்கள் பார்த்தபோது ஒரு பகுதியின் வாழ்வியல் உணர்வை நாம் ரசித்தோம்.
அதைப்போல, இந்தப் படத்திற்குப் பிறகு சென்னை ‘பெரம்பூர்’ ஒரு சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது.