மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கரூர் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி,
“மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து திட்டங்களை மறுத்து வருகிறது. தற்போது, தொகுதி மறுவரையறை மசோதா என்ற பெயரில் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் போராட்டம் நடத்தியுள்ளார். பாஜக அரசு தமிழக மக்களின் குரல்வலையை நசுக்குகிறது. மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதற்கு தமிழக மக்கள் நிச்சயமாக பதில் தருவார்கள்.
வெண்ணைமலை கோயில் இனாம் நிலப் பிரச்னை என்பது அதிமுக ஆட்சியில் வந்தது. இனம் நிலத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பாஜக தொடர்பு அமைப்பைச் சேர்ந்தவர்.
அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் முறையாக மனுத்தாக்கல் செய்யாமல், தவறான ஆவணங்களைத் தாக்கல் செய்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு டி.ஆர்.ஓ-க்கள் கொண்ட அதிகாரிகளை நியமனம் செய்து, குழு அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இனாம் பிரச்னைக்கு மீண்டும் அமைய உள்ள திமுக ஆட்சியில் நிரந்தர தீர்வு காணப்படும்.
இந்த விவகாரத்தில் சிலர் செய்யும் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம். வழக்கை நடத்துபவர் யார் என்பது உங்களுக்கும் தெரியும். எனவே, ஊடகங்களும் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்.
மே 4-ம் தேதி பாருங்கள். நல்ல முடிவை மக்கள் வழங்குவார்கள்
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தலா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
வருமான வரி சோதனை என்பது புகாரின் பேரில் வருவது, இது வழக்கமான ஒன்று. தேர்தலுக்குப் பிறகு அந்தச் சோதனை எப்படி நடந்தது என்பது தெரிந்து விடும்.

5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் கொண்ட பட்டியல் வெளியிட்டு, எங்களது வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர், ஆனால் எதிர்க்கட்சியினர் அவர்கள் செய்த திட்டங்களை முன்னெடுக்காமல், தவறான தகவல்களைச் சொல்லி, தனிநபர் தாக்குதல் மூலம் பிரசாரம் செய்கின்றனர்” என்றார்.
ஹால்மார்க் லைசென்ஸ் வாங்குவதற்காகத்தான் செந்தில் பாலாஜி கோவை வந்துள்ளார் என அம்மன் அர்ச்சுணன் குற்றம்சாட்டியதற்கு பதில் கொடுத்த செந்தில் பாலாஜி,
“ஹால்மார்க் அலுவலகத்தை தனிநபர் எப்படி கையகப்படுத்த முடியும்? அது ஒன்றிய அரசின் அனுமதி பெற்ற நிறுவனம். ஹால்மார்க் நிறுவனம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியாமல், அரவேக்காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்?” என்றார்.