12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2 சதவீதம் தேர்ச்சி, ஈரோடு முதலிடம்  – Kumudam

Spread the love

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினர்.

பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை புதிய ஆட்சி பொறுப்பேற்காததால் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி. சந்தரமோகன் வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் , 98.05 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாம் இடமும், 97.63 சதவீதத்துடன் கன்னியாகுமரி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.வருகிற 13-ந்தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும்.

tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். அதேவேளையில், பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

‘வாட்ஸ் ஆப்’ மூலமும் அறியலாம்: ‘வாட்ஸ் ஆப்’ செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையைப் பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ் ஆப் செயலியில் 78452 52525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் hi எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர், தேர்வர்களின் வகுப்பை தெரிவு செய்தால், தொடர்ந்து வரும் பதில் செய்தியில் தேர்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே வாட்ஸ் ஆப் செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வாட்ஸ் ஆப் செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *