சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, வெறும் 15 நாள்களுக்குள் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் (Mahasamund) மாவட்டத்தில் உள்ள 551 கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 1,140-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த அசாத்தியமான நீர் மேலாண்மைப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
3.41 லட்சம் நீர்ச்சேமிப்பு கட்டமைப்புகள்
கோடைக் காலத்தில் ஏற்படும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் கிராம மக்கள் போர்க்கால அடிப்படையில் களமிறங்கினர். வெறும் 15 நாள்களில், மாவட்டம் முழுவதும் உறிஞ்சுகுழிகள் (Soak Pits), நீர்வரத்து அகழிகள் (Trenches), தடுப்பணைகள் (Check Dams) மற்றும் புதிய குளங்கள் எனச் சுமார் 3.41 லட்சம் நீர்ச்சேமிப்பு கட்டமைப்புகளை மக்கள் உருவாக்கினர்.

உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்
இந்தக் கட்டமைப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அப்பகுதியில் பருவமழை பெய்யத் தொடங்கியது. முதல் மழையிலேயே, மக்கள் அமைத்த உறிஞ்சுகுழிகள் மற்றும் தடுப்பணைகள் மூலமாகச் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீர் வீணாகாமல் பூமிக்குள் செலுத்தப்பட்டும், குளங்களில் தேக்கப்பட்டும் சேமிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மகாசமுந்த் மாவட்டத்தின் 1,140 கிராமங்களில் வறண்டு கிடந்த கிணறுகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் உதவிக்காகக் காத்திராமல், பொதுமக்களே ஒன்றிணைந்து தங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்து கொண்ட சத்தீஸ்கர் கிராம மக்களின் இந்த முயற்சி, நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.