Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷியை தென் மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா வம்புக்கு இழுத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் விவாதமாகி இருக்கிறது. 15 வயது சிறுவனை இப்படி நடத்தலாமா என்று திலக் வர்மாவை ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணியை எதிர்த்து தென் மண்டல அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அபிமன்யூ ஈஸ்வரன் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். அதிலும் முகமது சிராஜ் வீசிய ஒரே ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி 4, 6, 4 என்று அதிரடியில் வெளுத்து கட்டினார். மறுபக்கம் அபிமன்யூ ஈஸ்வரன் பவுண்டரியாக விளாசி தள்ளினார். இதனால் தென் மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா, வேறு வழியின்றி சிராஜ்ஜை அட்டாக்கில் இருந்து வெளியேற்ற வேண்டிய தேவை எழுந்தது.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கிய போது, திடீரென திலக் வர்மா அவரிடம் சென்று ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்கு நேராக மோதி கொண்டனர். இதன்பின் அடுத்த ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ரசிகர்கள் திலக் வர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 15 வயது சிறுவனிடம் இப்படிதான் நட்சத்திர வீரரான திலக் வர்மா சண்டையில் ஈடுபட வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் இன்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை திலக் வர்மாவின் கேப்டன்சி கொடூரத்திலும் கொடூரமாக அமைந்தது.
இதன்பின் வெகுண்டெழுந்த கிழக்கு மண்டல அணி வெளுத்து கட்டியது. சிறப்பாக ஆடிய கிழக்கு மண்டல அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்களை குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒரு சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 111 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அதேபோல் ஷிகர் மோகன் 120 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 85 ரன்களும், அபிமன்யூ ஈஸ்வரன் 86 பந்துகளில் ஒரு சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 72 ரன்கள் எடுத்தார்.