பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று ஆரம்பமாகியுள்ளது. முதன்முதலாக காமன்மேன் என்கிற பிரிவில் போட்டியாளர்கள் சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள். ̀பிக்பாஸ் காமன்மேன்’ நிகழ்ச்சியில் வென்ற போட்டியாளர்கள் திரை பிரபலங்களுடன் இணைந்துப் போட்டியிட இருக்கிறார்கள்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் முதல் நாளில் பிக்பாஸால் அறிவிக்கப்பட்டு மேடையில் ஏற்றப்பட்ட போட்டியாளர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களித்துள்ளனர். அதில் வென்றவர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
குறைவான வாக்குகள் பெற்ற போட்டியாளர்கள் தங்களது முதல் மேடையிலேயே வெளியேறியிருக்கிறார்கள்.

சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பரிச்சயமானவர் சாந்தினி தமிழரசன். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் பார்வையாளர்களின் வாக்கினைப் பெற்று தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.
வீட்டிற்குள் செல்வதற்கு முன் அவர் பேசியதிலிருந்து, “தொடர்ந்து ஷூட் இருந்ததால அன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். பல தடவை ஃபோன் வந்திருந்தது. யார்னு கேட்டப்ப தான் ̀பிக்பாஸ்’ வீட்டுக்குப் போறதுக்கான ஃபோன்னு தெரிஞ்சது.
எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்துச்சு. நாம போகணுமா வேண்டாமான்னு ரொம்ப குழப்பமாகத்தான் இருந்தது. முதல்ல பெருசா ஆர்வம் இல்லாமதான் இன்டர்வியூக்கு போயிருந்தேன். அங்க போனதும் அந்தப் புராசஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆர்வம் அதிகமாகிடுச்சு!” என்றவரிடம் காமன்மேன் வருவது குறித்து கேட்டோம்.

“வீட்டுக்குள்ள போனதும் எல்லாரும் போட்டியாளர்கள்தான்! காமன்மேன், செலிபரிட்டிங்கிற வித்தியாசம் எல்லாம் நான் பார்க்கல. எல்லாரும் அந்த வீட்டுக்குள்ள சமம். மக்களுக்கு யாரோட விளையாட்டு பிடிச்சிருக்கோ அவங்களை மக்கள் வீட்டுக்குள்ள வச்சிருக்க போறாங்க” என்றவரிடம் அவர் விளையாட்டு குறித்துக் கேட்டோம்.
“என் ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி எல்லாரும் சாந்தினின்னா ரொம்ப சாஃப்ட் ஆன பர்சன்னு சொல்லுவாங்க. நான் சாஃப்ட் ஆன பொண்ணுதான் ஆனா சண்டைன்னு வந்தா போல்டா பேசக்கூடிய ஆள்.

நான் பெரிய பிக்பாஸ் ஃபாலோயர் கிடையாது. போறோம்னு உட்கார்ந்து பார்த்தா நம்மளை அறியாம யாரோட சாயலாச்சும் நமக்கு வந்திடும். அதனால பிக்பாஸ் பார்க்கல. முதல் சீசன் பார்த்த அனுபவத்தை வச்சுதான் 10வது சீசனுக்குள்ள போறேன். நியாயமா விளையாடுறவங்களுக்கு நான் கண்டிப்பா குரல் கொடுப்பேன்” என்றார்.