மேலும், தனது மகள் முதுகலைப் படிப்பின் போது மாதம் ரூ. 60,000 உதவித்தொகை பெற்று வந்ததாகவும், எனவே அவரால் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ள முடியும் என்றும் அவர் வாதிட்டார். மகள் 18 வயதைக் கடந்த பிறகு, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை “பாதிக்கப்பட்ட நபர்’ என்று கருத முடியாது என்றும் அந்தத் தந்தை வாதிட்டார். மேலும் கடன் வாங்கி படிப்பை தொடர முடியுமென்றும் வாதிட்டார்.
ஆனால் தான் மேஜர் ஆனாலும் தனது கல்விக்கு உதவும் தந்தையின் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என்று மகள் வாதிட்டார். இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி சந்தோஷ் தனது தீர்ப்பில், “அடிப்படை வசதிகள், சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குவது பெற்றோரின் கடமையாகும். குழந்தை வயது வந்தவராக ஆனவுடன் இந்தக் கடமை முடிந்து விடுவதாகக் கூற முடியாது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “உலகெங்கிலும் உள்ள வழக்கம் மற்றும் நடைமுறையின்படி, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தருவது பெற்றோரின் தார்மீகக் கடமையாகும்” எனக் குறிப்பிட்டு, தந்தையின் நிதி நிலையை கவனத்தில் கொண்ட நீதிபதி சந்தேஷ், அவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய செழிப்பான வணிகத்தில் ஈடுபட்டு வருவதையும், கணிசமான நிதி வலிமையைக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டார்.
இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பண ரீதியான நிவாரணம் என்பது வெறும் பராமரிப்புச் செலவுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், கல்விச் செலவுகளையும் உள்ளடக்கியது என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. “மகள் வயதுக்கு வந்த பிறகு வங்கிக் கடன் பெற்றுத் தனது கல்வியைத் தொடரலாம் என்ற மனுதாரரின் வாதம், விசாரணை நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்வதற்கான ஒரு காரணமாக அமையாது” என்று நீதிபதி சந்தேஷ் குறிப்பிட்டார். ஒரு குழந்தை சட்டப்படி வயது வந்தவராக (சிறுவர் பருவத்தைக் கடந்தவராக) ஆனவுடனேயே பெற்றோரின் கடமைகள் தானாகவே முடிந்துவிடுவதில்லை என்றும் நீதிபதி சந்தோஷ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.