மேலும், ஏற்கெனவே ரூ.18.45 லட்சம் பில் தொகை பெற்றிருப்பதாகவும், அதற்கான 20 சதவிகித கமிஷனான ரூ.3.69 லட்சத்தை வழங்கிவிட்டு மீதமுள்ள பணியை முடிக்குமாறும் கதிரவன் கூறியதாகப் புகார் தெரிவிக்கிறது.
அவ்வளவு தொகையை உடனடியாக வழங்க முடியாது என சுரேஷ்குமார் கூறியபோது, முதல் தவணையாக ரூ.1 லட்சத்தை மறுநாள் வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையை இறுதி பில் போடும்போது வழங்க வேண்டும் என்றும் கதிரவன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார், இது குறித்து தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கடந்த 18.08.2026 அன்று கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதையடுத்து, ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தை சுரேஷ்குமாரிடம் வழங்கி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இன்று 19.08.2026 சுரேஷ்குமார் மூலம் அந்தப் பணம் கதிரவனிடம் வழங்கப்பட்டது.
சிவகிரியில் உள்ள அவரது வீட்டில் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், கதிரவனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தென்காசி மாவட்ட வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட வனச்சரக அலுவலரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.