Tamilnadu
oi-Vishnupriya R
தருமபுரி: 20 ஆண்டுகளாக ரசிகர் மன்றம், கட்சி என உழைத்த என் மகனை ஏன் கூப்பிடலை என கேட்டு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள் விழாவில் நிர்வாகிகளிடம் தவெக நகரச் செயலாளரின் தாய் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பிறந்தநாள் விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாப்பாரப்பட்டி நகரச் செயலாளர் ரமேஷ் என்பவரின் தாயார் முனியம்மாள் திடீரென அங்கு வந்து எம்எல்ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நகரப் பகுதியில் இவ்வளவு பெரிய பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் நிலையில், தனது மகன் ரமேஷுக்கோ அல்லது மற்ற கட்சி நிர்வாகிகளுக்கோ இதுகுறித்து எந்தவொரு முன்னறிவிப்போ, தகவலோ தெரிவிக்கப்படவில்லை என்று அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
அங்கிருந்த நிர்வாகிகள் ரமேஷின் தாயாரை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷிடம் கேட்டபோது நான் கட்சியிலும் கடுமையாக உழைத்து உள்ளேன். கஜேந்திரன் எம்எல்ஏவாக பாப்பாரப்பட்டி நகரப் பகுதியில் கடுமையாக வேலை செய்துள்ளேன்.
இருந்தாலும் எந்த ஒரு நிகழ்ச்சியும் என்னை அழைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். இதனால் என்னுடைய தாய் நிகழ்ச்சியில் நேரில் சென்று சட்டசபை உறுப்பினர் கஜேந்திரரிடம் கேட்டதால் அங்கிருந்த நிர்வாகிகள் தாயை கீழே தள்ளி விட்டதாக கூறினார்.
தொடர்ந்து மாவட்டத்தில் மாவட்டச் செயலாளராக தாபா சிவா இருந்து வருகிறார். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராக கஜேந்திரன் என்பவர் வெற்றி பெற்று மாவட்டத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி போட்டுக் கொண்டு கோஷ்டி அமைத்து இரு குழுக்களாக நீயா நானா என்ற போர்வையில் அடிக்கடி வாய் தகராறில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது நகர செயலாளர் ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதாக ஆடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.