ஆய்வில் இருந்த மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதில், சேர்வைகாரன்பட்டி என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பட்டாசு தொழிலாளர்கள் சிலரிடம் பேசினோம், “வழக்கமாக தீபாவளி, புத்தாண்டு, தசரா உள்ளிட்ட பண்டிகைகளை கணக்கிட்டு பட்டாசு உற்பத்தி நடக்கும். தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் காலம் என்பதால் இது தொடர்பாகவும் நிறைய ஆர்டர்கள் பட்டாசு ஆலைகளுக்கு கிடைத்துள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.

வரும் 23-ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில் கடந்த 20-ம் முதல் 4 நாட்களுக்கு பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்படிருந்தது. இதனால், நேற்று ஒருசில ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நடந்துள்ளது. பொதுவாக பட்டாசு ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு உற்பத்தி செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. அதையும் மீறி தொழிலாளர்களை கட்டாயமாக வரவழைத்து உற்பத்தி நடந்துள்ளது. இதில், ஆண்களை விட பெண் தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.