India
oi-Shyamsundar I
அகமதாபாத்: இந்திய மருத்துவ மற்றும் ரயில்வே வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், மனித இதயம் ஒன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சையிலிருந்த நோயாளிக்கு அவசர அவசரமாக அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் சூரத் நகரிலிருந்து அகமதாபாத் வரை சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் கடந்து, இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மோசமான வானிலையால் எழுந்த சவால்
சூரத்தில் உள்ள அரசு சிவில் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபரின் குடும்பத்தினர், அவரது உறுப்புகளை தானம் செய்ய பெரிய மனதுடன் முன்வந்தனர். அதேவேளையில், அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா இதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இறுதி கட்ட இதய நோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளிக்கு இந்த இதயம் பொருந்துவது கண்டறியப்பட்டது.
பொதுவாக, உடலிலிருந்து எடுக்கப்பட்ட மனித இதயத்தை 4 மணி நேரத்திற்குள் நோயாளிக்கு பொருத்த வேண்டும். எனவே, 250 கி.மீ தொலைவில் உள்ள இடத்திற்கு இதயத்தை விரைவாகக் கொண்டு செல்ல ஹெலிகாப்டர் அல்லது விமான சேவை பயன்படுத்தப்படும்.
ஆனால், அந்த சமயத்தில் குஜராத் மாநிலம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அனைத்து வான்வழிப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கின. சாலை வழியாகக் கொண்டு செல்ல முயன்றாலும், கனமழையால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்ற ஆபத்து இருந்தது.
சரியான நேரத்தில் உதவிய வந்தே பாரத்
மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வேறு வழியில்லாமல் போன நிலையில், அவர்கள் இந்திய ரயில்வேயை அணுகினர். எந்தக் காலநிலையையும் தாங்கி, அதிவேகமாகவும் துல்லியமாகவும் இயங்கக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
உடனடியாக மருத்துவக் குழுவினர், ரயில்வே துறை மற்றும் குஜராத் காவல் துறை இடையே பம்பரமாக ஒருங்கிணைப்புப் பணிகள் தொடங்கின. அதிநவீனப் பாதுகாப்புப் பெட்டி ஒன்றில் பாதுகாக்கப்பட்ட இதயம், சிறப்பு மருத்துவக் குழுவுடன் சூரத் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. காலை 9:18 மணிக்கு ரயில் எண் 20901 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்த முக்கியப் பயணத்தைத் தொடங்கியது.
கிரீன் காரிடார் வழித்தடம்
இந்த ரயில் எங்கும் நிற்காமல் தடையின்றிச் செல்ல ரயில்வே நிர்வாகம் தண்டவாளங்களை முற்றிலும் தயார் நிலையில் வைத்திருந்தது. சுமார் 250 கி.மீ தூரத்தை வந்தே பாரத் ரயில் மிகக் குறைந்த நேரத்தில் கடந்து, காலை 11:40 மணிக்கு அகமதாபாத் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது.
அகமதாபாத் ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்ஃபார்மில் ரயில் நின்றதும், அங்கிருந்து யு.என். மேத்தா மருத்துவமனை வரை உள்ளூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை இணைந்து சிறப்பு கிரீன் காரிடார் பாதையை அமைத்திருந்தன. காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் வெறும் 15 நிமிடங்களில் இதயம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
வெற்றி பெற்ற அறுவை சிகிச்சை
மருத்துவமனையில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, அறுவை சிகிச்சை முழு வெற்றியடைந்தது. கொடையாளரின் இதயம் புதிய நோயாளியின் நெஞ்சில் ஆரோக்கியமாக துடிக்கத் தொடங்கியது.
தானம் அளித்த குடும்பத்தினரின் தியாகம், மருத்துவர்களின் துரித முடிவு, ரயில்வே துறையின் கச்சிதமான செயல்பாடு மற்றும் காவல்துறையின் திறமையான ஒருங்கிணைப்பு என அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சியால் ஒரு மனித உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

