கண் பரிசோதனையில், குழந்தைக்கு மயோபியா (Myopia) எனப்படும் கிட்டப்பார்வையோ, ஹைப்பர்மெட்ரோபியா (Hypermetropia) எனப்படும் தூரப்பார்வையோ அல்லது சிதறல் பார்வையோ (Astigmatism ) இருக்கின்றனவா என்று பார்ப்பார்.
அப்படி ஏதேனும் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டால், அதற்கேற்ற பொருத்தமான கண்ணாடியைப் (Appropriate Glasses) பயன்படுத்த அறிவுறுத்துவார்.
மாறுகண்ணோடு தொடர்புடைய மற்றொரு முக்கியமான விஷயம் “ஆம்பிலியோபியா’ (Amblyopia ) ஆகும். இதை ‘சோம்பேறிக் கண்’ (Lazy Eye) என்றும் சொல்வோம். இந்தக் குறைபாடு உள்ள கண்ணில் பார்வைத் திறன் குறைவாக இருக்கும். எனவே, மாறுகண்ணோடு ஆம்பிலியோபியா குறைபாடும் இருந்தால் அதையும் சரி செய்ய வேண்டும்.

இதற்கு ஆக்லுஷன் தெரபி (Occlusion Therapy) என்ற சிகிச்சை உதவும். இதில் பொதுவாக பார்வை நன்றாக உள்ள கண்ணை மூடி, பார்வை குறைவாக உள்ள பலவீனமான கண்ணை (Weak Eye) தூண்டும்படி செய்வார்கள். இதன் மூலம் குழந்தை, பலவீனமான கண்ணைக்கொண்டு நன்றாகப் பார்ப்பதை உறுதி செய்ய முடியும். இந்தச் சிகிச்சையோடு, கண்களுக்கான பயிற்சிகளும் (Orthoptic Exercises) வழங்கப்படும்.
எனவே, உங்கள் குழந்தை விஷயத்தில், முதலில் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்து, கண்ணை வலுப்படுத்துவதோடு பார்வைத்திறனை 6/6 என்ற அளவிற்குக் கொண்டு வர வேண்டும். ஒருவேளை கண்ணாடி அணிந்த பிறகும் மாறுகண் குறைபாடு சரியாகவில்லை என்றால், அதற்கு அடுத்தபடியாக அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படலாம். அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் மாறுகண் குறைபாட்டை முற்றிலும் சரிசெய்துவிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.