புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் நடந்து முடிந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை (மே 4-ஆம் தேதி) வெளியாக இருக்கின்றன. இதனிடையே, இந்தியத் தேர்தல் ஆணையம் ஐந்து மாநிலத் தேர்தல்களும் நிறைவடைந்த பிறகே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருந்தது.
அதன்படி, கடந்த மாதம் 29-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு மேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும்; புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியும், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் கூட்டணியும், அஸ்ஸாமில் என்.டி.ஏ கூட்டணியும் வெற்றிபெறும் எனவும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெரும் திருப்பமாகத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து இறக்கி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் பெரும்பாலான நிறுவனங்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே தேர்தல் நேரச் சலசலப்புகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால், அங்கு ஒருவிதப் பரபரப்பு நிலவுகிறது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை காலை 8 மணிக்கு 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்கள் இந்த லிங்க்கில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.
இந்த லைவ் அப்டேட்ஸ்… தமிழ்நாடு தவிர்த்து புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் தொடர்பானது.
நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், இங்கே தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.
விகடன்.காம்-உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!