
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் மே 4-ம் தேதி காலை 8 மணி முதல் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து கீழ்காணும் இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள https://results.eci.gov.in/ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகமான இணையதளத்தில் ஒவ்வொரு தொகுதியின் சுற்று வாரியான நிலவரங்களும், முடிவுகளும் நொடிக்கு நொடி புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்படும். இது தவிர ECINET மற்றும் வாக்காளர் உதவி Voter Helpline என்ற செயலியின் வாயிலாகவும் நிலவரங்களையும், முடிவுகளையும் பொது மக்கள் உடனுக்குடன் அறிந்துக் கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரி வழங்கும் தகவல்கள், இணையதளத்திலும், செல்பேசி செயலியிலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீசாருக்கு அனுமதி இல்லை
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், தேர்தல் பணியில் தொடர்பு உடையவர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் அனுமதிக்க வேண்டும். சீருடையுடன் மற்றும் சீருடை இல்லாத போலீசார் அனுமதிக்கக் கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலர் அழைத்தால் மட்டுமே போலீசார் ஓட்டு எண்ணும் அறைக்குள் வரலாம். இல்லையெனில், உள்ளே செல்ல அனுமதியில்லை.சுற்று வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரங்களை கரும் பலகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் எழுத வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிவையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தபால் வாக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை
வெற்றிக்கான இடைவெளி, பெறப்பட்ட தபால் ஓட்டுகள் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால், தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணலாம். ஓட்டு எண்ணிக்கை கடைசி சுற்று முடிந்ததும் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 ஓட்டுச்சாவடிகளின் விவி பேட் இயந்திரங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றில் உள்ள பேப்பர் சிலிப்களை சரிபார்க்க வேண்டும் என ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தபால் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அனுப்பிய படிவம் தான் என்பதை உறுதி செய்த பிறகே, ‘படிவம் -13 ‘சி’ யை திறக்க வேண்டும். உள்ளே, ஓட்டுச்சீட்டு இருக்கும் சிறிய உறையுடன், உறுதிமொழி படிவம் இல்லாமல் இருந்தால் நிராகரிக்கலாம்.
உறுதிமொழி படிவத்தில், வாக்காளர் கையொப்பம் இல்லாமல் இருந்தாலும், அதிகாரியின் சான்றொப்பம் இல்லை என்றாலும் நிராகரிக்கலாம். உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடும், ஓட்டுச்சீட்டு வரிசை எண்ணும், ஓட்டுச்சீட்டு வைத்து மூடப்பட்டிருக்கும் சிறிய உறையின் (படிவம் -13 ‘பி’)) மீது எழுதிய வரிசை எண்ணும் மாறுபட்டிருந்தாலும் தள்ளுபடி செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.