International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: ஓமன் வளைகுடாவில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றம், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம் கடந்த சில நாட்களாக அங்கு இந்தியர்கள் இருந்த கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது. அங்கு என்ன நடந்தது.. அதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
ஓமன் வளைகுடாவில் பலாவு நாட்டுக் கொடியுடன் பயணித்த ‘MT Settebello’ என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தக் கப்பல் ஈரானில் இருந்து சட்டவிரோதமாகக் கச்சா எண்ணெய்யைக் கடத்திச் செல்வதாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீற முயல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

60 எச்சரிக்கை
இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் கூறுகையில், “அந்தப் பகுதியில் அமெரிக்கா விதித்திருந்த கடல்வழித் தடையை மீற இந்தக் கப்பல் பலமுறை முயன்றது. தாக்குதலுக்கு முன்னதாக, சுமார் இரண்டு வாரங்களில் மட்டும் 60 முறை வாய்மொழி எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, 8 முறை Shows of force எனப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகள் (விமானங்கள் கப்பலுக்கு மேல் பறப்பது மற்றும் வானில் எச்சரிக்கை விளக்குகளை வீசுவது போன்றவை) மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக, கப்பலை முடக்குவதற்காக அதன் என்ஜின் அறையைக் குறிவைத்து அமெரிக்கப் போர் விமானம் துல்லியமான ஏவுகணைகளை வீசியது.
3 பேர் உயிரிழப்பு
இந்தத் தாக்குதலின் போது கப்பலில் மொத்தம் 24 இந்திய மாலுமிகள் பணியில் இருந்தனர். அமெரிக்கா ஏவுகணை வீசுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே மாலுமிகளை என்ஜின் அறையை விட்டு வெளியேறுமாறு எச்சரித்ததாகக் கூறினாலும், இந்த தாக்குதலில் துரதிர்ஷ்டவசமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து, இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இருப்பினும், “அமெரிக்கப் படைகள் அமைதியை நிலைநாட்ட எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வணிகக் கப்பல்கள் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவிற்குப் பதிலளித்தார்.
அமைதி ஒப்பந்தம்
இதற்கிடையே மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துள்ளன. அதன்படி லெபனான் உள்ளிட்ட அனைத்துப் போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும். இந்த ஒப்பந்தம் வரும் ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், “ஈரான் உடனான ஒப்பந்தம் இப்போது முழுமையடைந்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க நான் உத்தரவிடுகிறேன். அமெரிக்காவின் கடல்வழித் தடைகள் நீக்கப்படுகின்றன. எண்ணெய் தடையின்றி பாயட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிம்மதி
இந்த அமைதி ஒப்பந்தம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்கவும், கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்கும் இந்திய மாலுமிகளுக்கு இது ஒரு மிகப் பெரிய நிம்மதியைத் தந்துள்ள போதிலும், உயிரிழந்த 3 இந்திய மாலுமிகளின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாக உள்ளது.