கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி”ஸ்கோப் தொடர்!
கதிர் எனும் ஓர் இளைஞன் கல்லூரிக்குப் போகாமல் கட்டடித்துவிட்டு, நண்பர்களோடு தியேட்டருக்குச் செல்லுகிறான். தியேட்டரில் ரவுடித்தனம் செய்கிறான். பால் பூத்தில்கூட பெரியோர்களிடம் பொறுக்கித்தனமாக நடந்துகொள்கிறான். சிக்னல்களில் நிற்கும் கார்களின் மீது பைக் சாவியால் கோடு போடுகிறான். ஒழுங்காகப் படிக்காமல் 12 பேப்பர்கள் அரியர்ஸ் வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான். கொஞ்சமாவது பொறுப்பு, கொஞ்சமாவது பயம், கொஞ்சமாவது உழைப்பு -இவற்றோடு முயற்சித்துப் பார்த்துவிட்டு பெயிலாகியிருந்தால் கூட பரவாயில்லை.
ஆனால், எதுவுமே இல்லாமல் ஃபெயிலாகிவிட்டு, அதற்காகக் கொஞ்சம் வருத்தமும் இல்லாமல் எப்படி இவனால் இப்படி சாப்பிட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்று ஆதங்கப்பட்டு, அவனைக் கண்டிக்கிறார் அப்பா. அவருக்கு மட்டும் அல்ல, பார்வையாளர்களான நமக்கும் அவன் மீது அப்படியான ஆத்திரம்தான் வருகிறது.

அவன் வசிக்கும் காலனிக்கு அனிதா என்னும் வடநாட்டுப் பெண் புதிதாகக் குடிவருகிறாள். தொடக்கத்தில் அவளுடன் வம்புக்குப் போகும் கதிர், கொஞ்ச நாட்களிலேயே அவள் மீதான பாலியல் மயக்கத்தில் அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால், அந்தப் பெண்ணோ அவனை அருவருப்பாகவே பார்க்கிறாள். அதைக்கூட அவன், காதல் பார்வை என்று எண்ணிக் கொள்கிறான். அவனுடைய நண்பர்கள் அதைச் சுட்டிக்காட்டும்போதுகூட அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். எப்படியாவது டிகிரி சர்டிபிகேட் மட்டும் வாங்கி விட்டால், வேலைக்குப் போய் கார், வீடு என்று செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவனின் புரிதலும், முதிர்ச்சியும் எந்த அளவில் இருக்கும்? இப்படித்தான் இருக்கும்!
முதல்முறையாக கதிர், அனிதாவிடம் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறான். அதற்காக அவன் தேர்ந்தெடுக்கும் இடம், நெருக்கடியான நகரப்பேருந்து. அந்தக் கூட்டத்தில் வைத்துக் காதலைச் சொல்ல முயற்சிக்கிறான். அப்போதுகூட மிகவும் நம்பிக்கையோடு, ‘நம்ம இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்த உடனேயே புடிச்சுப் போச்சு! அப்புறம் என்ன, ஐ லவ் யூ சொல்ல வேண்டியதுதானே’ என்று அவளை பார்த்துக் கேட்கிறான். ஏற்கனவே வெறுப்பில் இருந்த அனிதா உச்சக்கட்ட கோபம் கொள்கிறாள். அதோடு சூழல் அவன், அவள் மீது தவறாகக் கைவைக்க முயலுகிறான் என்று தவறாகவும் எண்ணும்படி அமைந்துவிடுவதால், அவனைச் செருப்பால் அடித்து போலீசிலும் மாட்டி விடுகிறாள். கொஞ்ச நேரம் கதிருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நிஜம் அவனது மண்டைக்கு உறைக்கவே நீண்ட நேரம் தேவைப்படுகிறது.