Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் 8 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணிக்குள் சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டிருந்தாலும், ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக ஆடிய மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ், யாஷ் தாகூர், அசோக் சர்மா ஆகியோரில் ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை. இதனால் கவுதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், பும்ரா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நாள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா இந்த டி20 தொடரில் கம்பேக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் நிதிஷ் ரெட்டி, பும்ரா, ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இன்னும் ஃபிட்னஸை நிரூபிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களில் 4 பேர் இன்னும் முழு ஃபிட்னஸை எட்டவில்லை என்பது ரசிகர்களிடையே கொந்தளிக்க வைத்துள்ளது.
ஜிம்பாப்வே டி20 தொடரை ஒப்பிட்டால் மொத்தமாக 8 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே டி20 தொடரில் ஆடிய மயங்க் யாதவ், சூர்யவன்ஷி ஷெட்கே, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாகூர், அசோக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் ஆகிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் பிரப்சிம்ரன் சிங்கை தவிர்த்து மற்ற அனைவருமே ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக ஆடினர்.
அதிலும் பிரின்ஸ் யாதவ் தொடர்ச்சியாக அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 3 அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடி இருந்தார். மயங்க் யாதவ் நீண்ட மாதங்களுக்கு பின் வந்து சிறப்பாக பவுலிங் செய்து முதல் ஓவர்லேயே விக்கெட்டுகளை கொத்து கொத்தாக வீழ்த்தி இருந்தார். ஆனால் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.
இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் எதற்காக அத்தனை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இந்த டி20 தொடரில் 4 ஸ்பின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். அதற்கான காரணமும் ரசிகர்களிடையே விமர்சனமாகி இருக்கிறது. இதனால் தேர்வுக் குழு மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை ரசிகர்கள் கடுமையாக சாட தொடங்கி இருக்கின்றனர்.
