சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் அளித்த ரகசிய புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. புகார்தாரர் அளித்த பென்டிரைவை ஆய்வு செய்தபோது, அதில் வயதான நபர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். மேலும், காவல்துறையின் விரிவான விசாரணையில், வீடியோவில் இருந்த நபர் பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பது தெரியவந்தது.

இவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த வீட்டிற்கு சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதோடு, பல தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் சிறுமிகளை அனுப்பியிருப்பது அம்பலமானது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காவல்துறை சோதனை நடத்தி, வழக்குடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றினர். இந்த குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய ஜெம் குழுமத் தலைவர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், வீராமணி மற்றும் அவரது கூட்டாளிகளாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மேலும் பல பாதிக்கப்பட்ட சிறுமிகள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொழிலதிபர் வீராமணியால் குறைந்தபட்சம் 9 சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை புலனாய்வாளர்கள் திரட்டியுள்ளனர்.
நம்பகமான தகவல்களின் அடிப்படையில் காவல்துறை சில சிறுமிகளைக் கண்டறிந்து விசாரணை நடத்தியபோது, கடந்த காலங்களில் தாங்கள் சிறுமிகளாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் இதன் மூலம் சுரண்டப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக காவல்துறை தெளிவுப்படுத்துகிறது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, “பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான ரகசியம் காக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளோம். வீடியோவில் காணப்படும் சிறுமி பட்டியலின (SC) சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், நடைமுறையில் உள்ள நலத்திட்டத்தின் கீழ் அவருக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சாந்தி என்பவரிடமிருந்து வீரமணிக்கு அனுப்பப்பட்ட செய்திகளில், 2003-ம் ஆண்டு ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து நினைவிருக்கிறதா? என்று கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்தும் தீவிர விசாரணை நடத்தி கூடுதல் தகவல்களைத் திரட்டி வருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ், மூத்த அதிகாரிகளுடன் இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி, விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு தனிப்படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, வீரமணியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரது வயதைக் கருத்தில் கொண்டு, புழல் மத்திய சிறை வளாகத்திலேயே வைத்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இன்னும் இதில் சம்பந்தப்பட்ட மற்ற தொழிலதிபர்களும், பிரமுகர்களும் எப்போது கைது செய்யப்படுவார்கள் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.