Admk complains of five thousand rupees being paid to voters in Coimbatore South constituency -கோவை தெற்கில் ரூ.5 ஆயிரம் பட்டுவாடா செய்ததாக புகார் – நள்ளிரவு அடிதடி, தடியடியால் பரபரப்பு!

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக தொண்டாமுத்தூர் , சிங்காநல்லூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. குறிப்பாக கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கரூரைச் சேர்ந்த குழுவினர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு ரூ. 2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்றிரவு ராமநாதபுரம் 80 அடி வீதியில் உள்ள தாமரை பெரிய நாயகி வீதி, அங்கண்ணன் வீதி ஆகிய இடங்களில் கரூர் குழுவினர் பணப்பட்டுவாடா செய்த நிலையில், அவர்களை அ.தி.மு.க-வினர் பிடித்து தாக்குதல் நடத்தினர்.

மேலும் கரூர் குழுவினரின் காரைத் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க-வினர், கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். மேலும் அந்தக் காரில் பணம் இருக்கின்றதா எனச் சோதனை செய்ததுடன், காரில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு அ.தி.மு.க.வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், பா.ஜ.க. மாநகர மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் வந்த நிலையில், அ.தி.மு.க-வினர் கார் கதவை உடைக்க முயன்றனர்.

அம்மன் அர்ச்சுணன்

அம்மன் அர்ச்சுணன்

அப்போது காரில் இருந்தவர்களிடம் இருந்த ஒரு பையைப் பிடுங்கி வந்த அம்மன் அர்ச்சுணன், கூட்டத்திற்கு இடையே வைத்து திறந்து காட்டினார். அதில் வேஷ்டி, துணி போன்றவை மட்டுமே இருந்ததால் அ.தி.மு.க-வினர் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் காரை முழுமையாகச் சோதனை செய்ய வேண்டும் என அ.தி.மு.க.-வினர் கோரிக்கை வைத்த நிலையில், போலீசார் சோதனை செய்தபோதும் பணம் எதுவும் சிக்கவில்லை.

பின்னர் அ.தி.மு.க-வினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தி.மு.க-வினர் 6 பேரைப் பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே பிடிபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, ராமநாதபுரம் காவல் நிலையத்தை அ.தி.மு.க-வினர் முற்றுகையிட்ட நிலையில் , திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் காவல் நிலையம் முன்பாகக் குவிந்தனர். இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் வாக்குவாதம் செய்த நிலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அப்போது இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படவே போலீசார் லேசான தடியடி நடந்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *