International
oi-Vigneshkumar
போலந்து: இந்த காலத்தில் எல்லாமே ஏஐ மற்றும் மெஷின் லெர்னிங் என்றே மாறி வருகிறது. ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைக்கும் பல்வேறு நிறுவனங்களும், அதற்கு பதிலாக ஏஐ பக்கம் போகிறார்கள். ஆனால், போலந்தில் சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் ஆட்களும் வேண்டாம் ஏஐயும் வேண்டாம் என சொல்லிவிட்டு ஆடுகளை வேலைக்கு எடுத்துள்ளனர்.
இப்போது நாம் எந்த துறையை எடுத்து கொண்டாலும் ஏஐ தான். சில ஆண்டுகளில் மட்டும் ஏஐ பல்வேறு துறைகளை மொத்தமாக மாற்றிவிட்டது. இதனால் உலெகங்கும் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி ஸ்டார்ட்அப் வரை பல நிறுவனங்களில் வேலையிழப்பும் கூட நடைபெறுகிறது. ஆனால், இங்கு ஒரு நாட்டில் மனிதர்களின் வேலையை ஆடு ஒன்று பறித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

சோலார் மின்சாரம்
இந்த காலத்தில் சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட மாற்று முறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் புவிவெப்ப மயமாதல் தொடர்ந்து பிரச்சினையாக உள்ள நிலையில், சோலார் உற்பத்தி அதிகரிக்கிறது.
இந்த சோலார் உற்பத்திக்குப் பெரிய திறந்த வெளியில் பல நூறு சோலார் பேனல்களை பொருத்துவார்கள். பெரும்பாலும் புல்வெளிகளில் தான் இந்த சோலார் பேனல்கள் பொருத்தப்படும். அதற்காக ஸ்பெஷலாக எதுவும் செய்ய மாட்டார்கள். கீழே புல் இருப்பதால் அவை சீக்கிரமே வளர்ந்துவிடும். இது குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளர்ந்தால் சோலார் பேனல்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
ஆடுகள்
இதனால் பொதுவாக தொழிற்சாலைகளில் உள்ள சோலார் மின் நிலையங்களைப் பராமரிக்கப் புல்வெட்டும் இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் தனது போலந்து ஆலையில் வித்தியாசமான ஒரு அணுகுமுறையைப் பின்பற்றி இருக்கிறது. அதாவது ஆளும் வேண்டாம் ஏஐயும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, புல்லை சமாளிக்க 100 செம்மறி ஆடுகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
புல்லை சாப்பிடும் ஆடுகள்
போஸ்னான் தொழிற்சாலையில் அமைந்துள்ள இந்த சூரிய மின்சக்தி பூங்கா தான் ஐரோப்பாவில் தொழிற்சாலை ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள மிக பெரிய சோலார் திட்டங்களில் ஒன்றாகும். இங்கு சுமார் 31,000க்கும் அதிகமான சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இங்கு புல் அதிகமாக வளர்வதால் அவற்றை அடிக்கடி வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதுநாள் வரை ஆட்களை வைத்து தான் இயந்திரங்கள் மூலம் இந்த புல்லை வெட்டுவார்களாம். இந்தச் சூழலில் தான் இப்போது ஆட்கள் வேண்டாம் என முடிவு செய்துள்ள ஆலை நிர்வாகம், 100 செம்மறி ஆடுகள் இதற்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
18.3 மெகாவாட் திறன் கொண்ட இந்த சோலார் மின் திட்டத்தை பெர்லினை தலைமையிடமாகக் கொண்ட குவான்டா எனர்ஜி நிறுவனம் அமைத்துள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் இந்த மின் நிலையம் தொழிற்சாலையின் முழு மின்சார தேவையையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது. ஆண்டுதோறும் தொழிற்சாலையின் மொத்த மின்சார தேவையில் சுமார் 25 சதவீதத்தை இந்த சோலார் ஆலை வழங்குகிறது.
இருவருக்கும் நல்லது
சோலார் பேனல்களுக்கு அடியில் வளர்ந்திருக்கும் புற்களை ஆடுகள் மேய்வதால் பராமரிப்பு செலவு குறைகிறது. அதேநேரத்தில் புல்வெட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படாததால் எரிபொருள் பயன்பாடும், கார்பன் உமிழ்வும் குறைகின்றன. மேலும், பேனல்களின் நிழல்களே ஆடுகளுக்கும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.