இதற்காக ‘Egocentric data’ எனப்படும் “முதல் நபர் கோணத்திலான’ வீடியோ தரவுகள் தேவைப்படுகின்றன. அதாவது, ஒரு மனிதர் தன் கண்களால் ஒரு வேலையை எப்படிப் பார்க்கிறாரோ, அதே கோணத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள். இதற்காகவே மனிதர்களின் தலையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் கிளாஸ்கள் அல்லது சென்சார் கேமராக்களைப் பொருத்தி, அவர்கள் வேலை செய்யும் விதம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு ரோபோக்களுக்குப் பயிற்சியாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இது எப்படி நடக்கிறது?
இந்தத் திட்டத்தில் சாதாரண இல்லத்தரசிகள் முதல் சாலையோரத் தொழிலாளர்கள் வரை பலரும் ஈடுபட்டுள்ளனர். வீடியோ எடுக்கும் ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஒருவர் மாம்பழம் நறுக்குவது, சமையல் செய்வது போன்ற அன்றாட வீட்டு வேலைகளைத் தன் தலையில் ஸ்மார்ட்போனைப் பொருத்திக்கொண்டு பதிவு செய்கிறார். அவர் இந்த வீடியோக்களை பிரத்யேக செயலி வழியாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கும் ஒரு முன்னணி AI நிறுவனத்திற்கு அனுப்புகிறார்.
பெங்களூருவில் கடந்த பத்து ஆண்டுகளாகச் சாலையோரம் பூக்கட்டி விற்கும் 55 வயது பெண்மணி ஒருவரும், தன் நெற்றியில் கேமராவைப் பொருத்திக்கொண்டு பூக்கட்டும் வீடியோவைப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.