Anbe Sivam – 3 | மரணத்தில் இட ஒதுக்கீடு கேட்டவர்| அன்பே சிவம் | தவத்திரு பொன்னம்பல அடிகளார்! | anbe sivam part 3 by ponnambala adigalar

Spread the love

இதன்மூலம் பாரி செய்ய வேண்டிய கடமையை, பாரி இல்லாத நிலையில் அவனுடைய அருமை நண்பன் கபிலர் நிறைவேற்றினார்.

நட்பு என்றால் என்ன? தேநீர்க் கடையில் கூடுவது நட்பா? மாலை நேரத்தில் மதிமயங்கும் மதுக்கடை நட்பா? இவை நட்பின் உண்மையான இலக்கணம் அல்ல. நண்பன் இல்லாத இடத்தில், அவனுடைய வாழ்க்கையில் அவன் செய்ய வேண்டிய கடமையை யார் செய்கிறாரோ, அவர்தான் உண்மையான நண்பன். அந்த நட்பின் இலக்கணத்தில் கபிலர் உயர்ந்து நிற்கிறார்.

அங்கவை, சங்கவை இருவருக்கும் திருமணம் செய்து வைத்த பிறகு, தனது கடமை முடிந்துவிட்டதாக கபிலர் கருதினார். நண்பனைப் போய்ச் சேர முடிவெடுத்தார்.

அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம்தான் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருந்த அந்தக் குன்று. அந்தக் குன்றின் மீது அமர்ந்து தனிமையில் தவமிருந்து, உண்ணாநோன்பிருந்து தனது உயிரைத் துறந்தார் கபிலர். நண்பனுக்காகவும் நட்புக்காகவும் உயிரையே துறந்த அந்த நட்பு இன்றும் நம்மைக் கண்கலங்க வைக்கிறது.

இன்று நண்பர்கள் தினத்தில் நாம் கை குலுக்கிக்கொள்கிறோம். ஆனால், அந்தக் கைகுலுக்கலுக்குள் ஒருவரை எப்படி வீழ்த்தலாம், எப்படி அழிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. இன்றைய நண்பர்கள் உலகம் இருவேறு உலகமாக மாறியிருக்கிறது. அதற்கு மாறாக, கபிலரும் பாரியும் கொண்டிருந்த நட்பு தனித்துவமானது; மகத்துவமானது.

இத்தகைய நட்பின் தொடர்ச்சியாக இலக்கியத்தில் இன்னொரு மகத்தான நட்பையும் பார்க்கிறோம். அது கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்டிருந்த நட்பு.

இன்றைக்கு பதவி உயர்வுக்கும், பணித் தேவைகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்கிறோம். ஆனால், ஒருவன் இறப்பதற்காகவே இட ஒதுக்கீடு கேட்கிறான் என்றால் அது எப்படிப்பட்ட நட்பாக இருக்கும்? கோப்பெருஞ்சோழன், தான் உயிரைத் துறக்கப் போகும் இடத்தில் தனது வலப்பக்கத்தில் தனது நண்பனான பிசிராந்தையாருக்காக இடத்தை ஒதுக்கி வைத்தான்.

அது திரைப்படம் பார்ப்பதற்கான இடம் அல்ல; வாழ்க்கையை முடிப்பதற்கான இடம். கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பிருந்து உயிரைத் துறக்கத் தயாரானபோது, அவருடன் அமர்ந்து உயிரை விடுவதற்காகப் பலரும் வந்தனர். ஆனால், தன் அருகில் யாரும் அமரக்கூடாது என்று கோப்பெருஞ்சோழன் கூறினான். ஏனெனில், அந்த இடத்துக்குத் தன் நண்பன் பிசிராந்தையார் வருவார் என்று அவன் நம்பினான்.

அவரை கோப்பெருஞ்சோழன் பார்த்திருக்கிறாரா? பழகியிருக்கிறாரா? இல்லை. ஒருவரையொருவர் நேரில் பார்த்ததுகூட இல்லை. பழகாத, பார்க்காத அந்த நண்பர், தன்னுடைய வலப்பக்கத்தில் வந்து அமர்ந்து தன்னோடு உயிர் துறப்பார் என்ற நம்பிக்கை கோப்பெருஞ்சோழனுக்கு இருந்தது.

அதைத்தான் திருக்குறளும், “உணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம்” என்று எடுத்துரைக்கிறது. நட்புக்கு எப்போதும் நேரில் பழகியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உண்மையான அன்பும் உணர்வும் இருந்தால் அதுவே நட்பாகிறது.

இப்படிப்பட்ட நண்பர்களை நாம் எத்தனை பேரை நம் வாழ்க்கையில் பார்க்கப் போகிறோம்? உண்மையான நண்பர்கள் கிடைத்தால் நம் வாழ்வு மகத்தான வெற்றியைப் பெறும். அத்தகைய உண்மையான நட்பையும் அன்பையும் பற்றிச் சிந்திக்க வைக்கும் தளத்தில்தான் ‘அன்பே சிவம்’ என்ற சிந்தனையும் நம்மை அழைத்துச் செல்கிறது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *