டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசு இன்று அவர்களுடன் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இப்போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
மும்பை தாதரில் நேற்று 3 ஆயிரம் மாணவர்கள் கூடினர். இதே போன்று அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். கவுகாத்தியில் உள்ள சாச்சலில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் அஸ்ஸாம் வருவாய் அமைச்சர் கேசப் மஹந்தாவின் மகள் திபிசா மஹந்தா கலந்து கொண்டார்.
அவரது போராட்டம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் அவர் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.
நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து கோஷம் எழுப்பியதோடு ஆர்ப்பாட்டத்தில், அவர் மாணவர்களுடன் இணைந்து பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினார்.
அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியின் தலைவர் அதுல் போராவிற்கு அடுத்தபடியாக மூத்த தலைவராக கேஷப் மஹந்தா திகழ்கிறார். பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக அஸ்ஸாம் கன பரிஷத் உள்ளது. அதோடு மஹந்தா 2016-ஆம் ஆண்டு முதல் பாஜக அரசில் அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். மூத்த அமைச்சர்களில் ஒருவரான மஹந்தாவின் மகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில், கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவருக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டம் குறித்து மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,”‘இது மாணவர்களின் போராட்டம். அவர்களின் கோரிக்கைகளையும் வாதங்களையும் நாங்கள் மதிக்கிறோம். நமது பிரதமர் இந்தப் பிரச்சினையை முழுமையாகக் கவனித்து வருகிறார். அதேவேளையில், வெள்ளப்பெருக்கு காரணமாக அஸ்ஸாம் மாநிலம் ஒரு முக்கியமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம், எனவே அனைவரும் இந்தப் பேரிடரின் மீது கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று முதலமைச்சர் கூறினார்.