CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் – கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

Spread the love

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா போராட்டக்குழுவை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கும், CJP உறுப்பினர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது.

cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா
cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சி.ஜே.பி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், “நானும் மற்றொரு செய்தித் தொடர்பாளரான அசுதோஷ் ரங்காவும் அமைச்சர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் 10 நிமிடங்கள் சந்தித்து எங்களின் கோரிக்கை மனுவை அளித்தோம். நாங்கள் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சமர்ப்பித்துள்ளோம். இதுகுறித்து அமைச்சு மட்டத்தில் பேசுவதாக அவர் எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

தகுந்த உயர் மட்டத்தில் இதுபற்றி விவாதிப்பதாக அமைச்சர் உறுதி அளித்திருந்தாலும், இதுவரை எந்தவொரு இறுதி வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது அமைதியான போராட்டம் தொடரும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் நகலையும் அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, CBSE 12-ம் வகுப்பு இணையதளக் கோளாறு, CUET தேர்வுத் தாமதம் உள்ளிட்ட தொடர் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சரே நேரடிப் பொறுப்பாவார்.

கல்வி அமைச்சரின் நிர்வாகச் சீர்கேட்டைக் காட்டும் வகையில், இதுவரை எவ்வித கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களோ அல்லது நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. எனவே, அதற்கான ஆவனச் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *