CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.

இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களைக் குறிப்பாக மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்” என்றார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “த.வெ.க இப்போதுதான் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

யாராக இருந்தாலும் ஊடகங்களை, பத்திரிகைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும். மதசார்பற்றக் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுதான் த.வெ.கவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பற்றி நாளை சிந்திக்கலாம். இப்போது த.வெ.க நல்லாட்சி தர வேண்டும். வெளியில் இருந்து நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தருகிறோம்.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

நாங்கள் இந்தியக் கூட்டணியில் இருக்கிறோம். ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்கள் தேசிய தலைவர்கள் அதில் கலந்துகொள்வார்கள்.

பிரவீன் சக்ரவர்த்தி எங்களை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தார். ‘நான் வெளியிட்ட பதிவு தவறுதான். அதைப் பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *