Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கருத்தரிக்காது என்பது உண்மையா?

Spread the love

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அதுவே கருத்தடையாக இருக்கும் என்கிறார்களே… அது உண்மையா… தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் எத்தனை மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருக்கும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.  

டாக்டர் கார்த்திகா

கருத்தரிப்பது தொடர்பான  மூட நம்பிக்கைகளில், இதையும் ஒன்றாகவே பார்க்க வேண்டும். பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும்போது, 6 மாதங்கள் வரை பீரியட்ஸ் வராது. குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறீர்கள், பீரியட்ஸும் வரவில்லை என்ற நிலையில் நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகள் மிகக் குறைவு. 

ஆனால்,  பெரும்பாலான பெண்களுக்கு பீரியட்ஸ் வர ஆரம்பித்துவிடும். பீரியட்ஸ் வரத் தொடங்கிவிட்டாலே கருமுட்டை வெடித்து வெளியே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அந்த நிலையில் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, நீங்கள் கருத்தரிக்க வேண்டாம் என நினைத்தால், தாய்ப்பால் கொடுக்கும் நிலையிலும் அவசியம் கருத்தடை முறையைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

எப்போதுமே ஒரு கர்ப்பத்துக்கும் அடுத்த கர்ப்பத்துக்கும் இடையில் குறைந்தது ஒன்றரை வருடம் அதாவது 18 மாதங்கள் இடைவெளியாவது விட வேண்டியது அவசியம்.

எப்போதுமே ஒரு கர்ப்பத்துக்கும் அடுத்த கர்ப்பத்துக்கும் இடையில் குறைந்தது ஒன்றரை வருடம் அதாவது 18 மாதங்கள்  இடைவெளியாவது விட வேண்டியது அவசியம். அதனால் ஏதேனும் ஒரு கருத்தடை முறையைப் பின்பற்ற வேண்டும். அது ஆணுறையாகவோ, கர்ப்பப்பையினுள் பொருத்திக்கொள்ளும் காப்பர்டி போன்ற கருவியாகவோ, வாய்வழி உட்கொள்ளும் ஹார்மோன் மாத்திரையாகவோ இருக்கலாம். அதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதில் எந்த பாதிப்பும் வராது. இது குறித்து மேலும் தகவல்கள் பெற உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *