நடிகர் ஆர்.மாதவன் தனது மகனின் நீச்சல் பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் துபாயில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார். இதே போன்று மற்றொரு பாலிவுட் நடிகரான விவேக் ஒபேராயும் இதே போன்று தொழில் நிமித்தமாக துபாயில் நிரந்தரமாக வசித்து வருகிறார். துபாயில் ரூ.1200 கோடி மதிப்புள்ள கட்டுமானத்தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் துபாயில் வசிப்பது குறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக மாற்றியிருப்பதாகக் கருதினால், நடிகர்கள் விவேக் ஓபராய் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் ஏன் துபாயில் குடியேறியுள்ளனர் என்று ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, “ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தங்களது மூட்டை முடிச்சிகளை கட்டிக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன.

2019-இல் வெளியான மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவராகவே நடித்த விவேக் ஓபராய், துபாயில் குடியேறியுள்ளார்.
இதே போன்று பிரதமர் மோடியைப் புகழ்ந்த ஆர். மாதவன் எங்கே வசிக்கிறார்? அவர் துபாயில் வசிக்கிறார். அப்படியிருக்க, இந்தியாவின் மீதும் பிரதமர் மோடியின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு பற்று இருந்து, பிரதமர் மோடிதான் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் என்று அவர்கள் நம்பினால், ஏன் அவர்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்? ஏன் தங்கள் குடும்பத்தினருடன் துபாயில் வசிக்கிறார்கள்?. அவர்கள் இங்கு வந்து, துரந்தர் போன்ற அரசு ஆதரவுடைய திரைப்படத்தில் பணியாற்றிவிட்டு, பின்னர் துபாய்க்குத் திரும்பிச் செல்வார்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் நடந்த காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட வார்த்தகள் சரியில்லை என்று கூறிய ராஜ் தாக்கரே, தவறான பாதையில் செல்லும் அத்தகைய குழந்தைகளை மன்னித்து, அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற பிரதமரின் கருத்தைக் நான் ஏற்கிறேன். யாரும் இவ்வளவு தரம் தாழ்ந்த மொழியைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், அவர் இதைத் தனது சொந்தக் கட்சியினரிடமும் சொல்ல வேண்டும்,” என்று கூறினார்.
மேலும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி முதல் தாக்கரே குடும்பத்தினர் வரையிலான முக்கிய தலைவர்களை கூட பாஜகவினர் இணையவழித் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களையும் (பாஜக ஆதரவாளர்களையும்) (இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை) நிறுத்தச் சொல்ல வேண்டும். பாஜகவின் ட்ரோல் குழுக்கள்தான் இதைத் தொடங்கின. எதை விதைக்கிறோமோ, அதை அறுப்பீர்கள்,” என்று தாக்கரே கூறினார்.