தூத்துக்குடி, மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி ஆக்னல். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சோனகன்விளை அருகிலுள்ள காணியாளன்புதூரில் உள்ள அவரது தோழி சந்தனமாரி என்பவரது வீட்டில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை சுற்றி வளைத்து தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு பிடிக்க முயன்றபோது தன்னிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் ராஜபிரபுவை நோக்கி சுட்டுள்ளார்.

துப்பாக்கி குண்டு அவரது வயிற்றுப்பகுதியை உரசிச் சென்றுள்ளது. இதனையடுத்து எஸ்.ஐ., ராஜபிரபு தனது துப்பாக்கியால் சுட்டார். வலது மார்பிற்கும் வயிற்றுக்கும் இடையில் குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த மரிய அந்தோணி, மயங்கி விழுந்தார். அவரை மீட்ட போலீஸார் முதலில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த எஸ்.ஐ., ராஜபிரபுவும் சிகிச்சை பெற்று வருகிறார்.