அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கால்பந்து ரசிகர்களின் கவனம் லியோனல் மெஸ்ஸி மற்றும் லமின் யமால் மீதே குவிந்துள்ளது. இருவரும் தங்களது தலைமுறையின் சிறந்த வீரர்களாகக் கருதப்படுவதுடன், பார்சிலோனாவின் புகழ்பெற்ற லா மாசியா அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள்.
மெஸ்ஸிக்கும் யமாலுக்கும் இடையேயான தொடர்பு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. யமால் குழந்தையாக இருந்தபோது, யுனிசெஃப் புகைப்படப் பதிவுக்காக மெஸ்ஸியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது. அப்போது குழந்தையாக இருந்த யமால், தற்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸிக்கு எதிராக களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், ஃபேனாட்டிக்ஸ் ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் அமெரிக்க கால்பந்து ஜாம்பவான் டாம் பிராடி, அந்தப் புகைப்படம் குறித்தும் யமாலுக்கு எதிராக விளையாடுவது குறித்தும் மெஸ்ஸியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மெஸ்ஸி, “லமின் குழந்தையாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்குப் பிறகு, இப்போது அவருக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது நம்ப முடியாத விஷயம். இது உண்மையிலேயே வியப்பாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், லமின் யமாலின் திறமையைப் பாராட்டிய மெஸ்ஸி, அவர் விளையாடும் பார்சிலோனா அணியை தான் மிகவும் நேசிப்பதாகவும், யமாலின் வளர்ச்சியை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார்.
“லமின் உண்மையிலேயே அற்புதமான வீரர். அவர் வரலாறு படைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த முறை அது நடக்காமல் தடுக்க நாங்கள் முயற்சிப்போம்” என மெஸ்ஸி தெரிவித்தார்.
உலகக் கோப்பை பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் கேப்டன் என்ற பெருமையை பெற மெஸ்ஸிக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் களமிறங்கி வெற்றி பெறும் இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு யமாலுக்கும் உள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் தொடங்கிய மெஸ்ஸி – யமால் கதை, தற்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு வளர்ந்துள்ளது. கால்பந்து உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


