சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிர்லா நிறுவனத்திற்கு ரூ.16,660 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்திருந்தார். அந்த அணியை வாங்க பலரும் ராஜஸ்தான் அணி உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
லட்சுமி மித்தல், அதார் பூனாவாலா, மற்றும் கல் சொமானி-ரோம் வால்டன் ஆகியோர் இணைந்து அணியை வாங்க போட்டி போட்டனர். கல் சொமானி-ரோம் வால்டன் பல்வேறு சட்ட சிக்கல் காரணமாக அணியை வாங்க முடியவில்லை. அதேசமயம் அணியை வாங்க போட்டி ஏற்பட்டதால் ரூ.15,660 கோடிக்கு தொழிலதிபர் லட்சுமி மித்தல், அதார் பூனாவாலா ஆகியோர் கூட்டாக வாங்கிக்கொள்ள முடிவு செய்தனர். இதில் லட்சுமி மித்தலிடம் 75 சதவீத பங்கு இருக்கும்.
அதார் பூனாவாலாவிடம் 18 சதவீத பங்கு இருக்கும். எஞ்சிய பங்கு தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் மனோஜ் பதாலேயிடம் இருக்கும்.

இதன் மூலம் ராஜஸ்தான் ஐ.பி.எல் அணி குழுவில் லட்சுமி மித்தல், அதார் பூனாவாலா மற்றும் மனோஜ் ஆகியோர் இருப்பார்கள். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் லட்சுமி மித்தல் அளித்த பேட்டியில், “‘எனக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும், எனது குடும்பம் ராஜஸ்தானைச் சேர்ந்தது. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸைத் தவிர நான் வேறு எந்த ஐபிஎல் அணியிலும் இடம்பெற விரும்பமாட்டேன். நான் ஒரு பள்ளி மாணவனாக இருந்தபோது முதன்முதலில் கிரிக்கெட் விளையாடினேன், அன்றிலிருந்து நான் இந்த விளையாட்டின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன்.
பல சிறந்த வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் சீருடையை அணிந்துள்ளனர். இதில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களும் அடங்குவர். அவர்கள் இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்துள்ளனர். இந்த சிறந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக லட்சுமி மித்தலுடன் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏலம் எடுத்த அதார் பூனவாலா இது குறித்து கூறுகையில்,”ஆதித்யா மிட்டலுடன் இணைந்து இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு வலுவான பாரம்பரியத்துடன் கூடிய முதன்மையான ஐபிஎல் அணியாகும். மேலும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் நீண்ட கால வெற்றிக்கு உதவ ஆவலாக இருக்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், ஐ.பி.எல் நிர்வாக கமிட்டியும் இந்த விற்பனைக்கு ஒப்புதல் கொடுக்கவேண்டும். ராஜஸ்தான் ராயல் அணியை இதற்கு முன்பு மனோஜ் கடந்த 2008ம் ஆண்டு 67 மில்லியன் டாலருக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.