விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இன்று சென்னையில் ரோட்டரி கிளப், சிறப்புக் குழந்தைகளுக்காக ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் காட்சியைத் திரையிட்டது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால், சோசியல் மீடியாவில் பகிரப்படும் வன்மக் கருத்துகள் பற்றியும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் குறித்தும் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “ஆன்லைன் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வன்மத்தைப் பற்றி நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன்.
இந்த ஆன்லைன் வன்மம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த முறை அதற்கு எதிராக நான் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் களத்தில் நின்றேன், இனிமேலும் நிற்பேன்.
யாரோ ஒருவரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்குவது சமூகத்திற்கே நல்லதல்ல” என்றவர், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் குறித்து, “தயவுசெய்து இதை யாரும் அரசியலாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நான் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஒரு சிறந்த தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக மட்டும்தான் பார்க்கிறேன். 13 வருடங்களாக எனக்கு அவர்களுடன் பழக்கம் இருக்கிறது.
அவர்களுடனான என்னுடைய அனுபவம் என்பது எப்போதுமே அழகானதாகவும், அன்பானதாகவும், இனிமையானதாகவுமே இருந்திருக்கிறது.

அதனால்தான், இந்தத் திரைப்படத்தை அவர்கள் மூலமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். என் சினிமா வாழ்க்கையில் 13 ஆண்டுகளாக எனக்குத் துணையாக இருந்தவர்களுடன் இணைந்து ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நினைத்தேன், அதைத்தான் செய்திருக்கிறேன்.
இதை அனைவரும் பாசிட்டிவாக அணுக வேண்டும் என்று விரும்புகிறேன். திரைப்படமே மிகவும் பாசிட்டிவாக இருப்பதால்தான் குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள்.” எனப் பேசியிருக்கிறார்.