IT வேலை வேண்டாம்.. அமெரிக்காவிலிருந்து வந்து விவசாயம் செய்யும் ஷஷி! இன்று ரூ.600 கோடி சாம்ராஜ்ஜியம் | Wipro Techie Quit US Job to Help Farmers, Built a ₹600 Crore Agriculture Business, wins hearts

Spread the love

Business

oi-Vigneshkumar

பெங்களூர்: அமெரிக்காவில் வசதியான ஐடி வேலையில் இருந்த ஒருவர், விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பி தொழில் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் பல்வேறு சவால்களை சந்தித்த அவர், கிட்டத்தட்ட 10 முறை திவாலாகும் நிலைக்கு சென்றுள்ளார். ஆனால் விடாமுயற்சியால் இன்று ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

நமது நாட்டில் பலரும் எப்படியாவது படித்து வெளிநாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்பதையே விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆவதே பலரது விருப்பமாக இருக்கும். ஆனால், சிலர் மட்டுமே தான் படித்த படிப்பு தாய்நாட்டிற்கு உதவ வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நினைத்த ஒருவர் தான் ஷஷி குமார்.

Shashi Kumar

ஷஷி குமார்

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்த அவர், படிப்பை முடித்த பிறகு விப்ரோ நிறுவனத்தில் சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, விவசாயத் துறையில் கவனம் செலுத்துவதற்காக தனது வசதியான ஐடி வேலையை விட்டுவிட்டார்.

விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் அக்ஷயகல்பா என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆனால், ஆரம்பத்தில் அவர் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். ஷஷி குமார் தொழில் தொடங்கிய முதல் சில ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறுகிறார். ஷஷியின் பிஸ்னஸ் தொடர்பாகவும் அவர் கடந்து வந்த பாதை தொடர்பாகவும் விகாஸ் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

திவாலும் ஆகும் ஆபத்து

அதில் அவர், “முதல் 9 ஆண்டுகளில் நிறுவனம் 6 முறை திவாலாகும் நிலைக்கு சென்றது. அவரது மனைவி தன்னிடம் சேமிப்பாக இருந்த ரூ.30 லட்சத்தை கொடுத்து உதவினார். அதுவே அந்த கடினமான காலகட்டங்களைச் சமாளிக்க உதவியது” என்று பதிவிட்டுள்ளார். விவசாயம் சார்ந்த தொழிலை தொடங்கியதால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஷஷி பல சவால்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

தந்தையின் 8 ஆண்டு கோபம்

தனது மகன் நல்ல ஐடி வேலையை விட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபடுவது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் அவரது தந்தையும் விவசாயம் செய்தவர்தான். இதனால் விவசாயம் செய்யும்போது தான் சந்தித்த சிரமங்களை தனது மகன் எதிர்கொள்ளக் கூடாது என்று அவர் நினைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு விவசாய துறையில் இறங்கிய ஷஷியிடம் அவரது தந்தை சுமார் 8 ஆண்டுகள் பேசவில்லையாம்.

தொடக்கத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டாலும் கூட பிறகு அக்ஷயகல்பா நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது மிக பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இப்போது அவரது நிறுவனத்தில் சுமார் 2,800 விவசாயிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியும் மாதம் சராசரியாக ரூ.1.28 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்களாம். அப்படி விவசாயிகளுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.480 கோடி தொகை வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரூ.600 கோடி சாம்ராஜ்யம்

இப்போது அவரது நிறுவனம் மாதத்திற்கு சுமார் ரூ.60 கோடி லாபம் ஈட்டுவதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டும் தொழில் சாம்ராஜ்யமாக அக்ஷயகல்பா வளர்ந்துள்ளதாக விகாஸ் கூறியுள்ளார். ஷஷி குமாரின் பயணம் குறித்த இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. 60,000க்கும் மேற்பட்ட வியூஸ் மற்றும் நூற்றுக்கணக்கான லைக்குகளும் கிடைத்துள்ளன.

பலரும் ஷஷியின் விடாமுயற்சியை பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அவர், “கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இதை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், அக்ஷயகல்பாவின் மோரை தான் சாப்பிட்டுள்ளதாகவும் மற்ற பிராண்டுகளை விட அது சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், அதன் விலை சற்று அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வசதியான ஐடி வாழ்க்கையை விட்டுவிட்டு விவசாய துறையில் இறங்கிய ஷஷி குமாரின் பயணம், தொழில் தொடங்கிய உடனேயே வெற்றி கிடைக்காது என்றாலும் நீடித்த முயற்சி நிச்சயம் மிக பெரிய வெற்றியை தரும் என்பதையே காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *