கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “சீன அரசின் அனுமதி பெற்று நேபாளம் வழியாக கைலாஷ் மான்சரோவர் யாத்திரைக்கு தமிழகத்திலிருந்து ஈரோடு, கரூர், ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சென்றிருந்தனர். கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சென்ற 73 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால் குடியிருப்புப் பகுதிகள், பாலங்கள் மற்றும் குடிவரவு சோதனைச் சாவடி உள்ளிட்டவை கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இரு நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதி என்பதால் தகவல் தொடர்பிலும், மீட்புப் பணிகளிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, தமிழக அரசு உடனடியாக சிறப்பு மீட்புக் குழுவை அனுப்பி, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தோரின் உடல்களைத் தாயகம் கொண்டுவரவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரிகளில் மாணவர் பேரவை மற்றும் முறையான தேர்தல்களை ஊக்குவிக்க வேண்டும். திரைப்படத் தணிக்கை விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். திரையரங்குகளில் வயது வரம்புச் சான்றிதழ் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டும். ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குச் சமூக வலைதளப் பயன்பாட்டை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய சட்டங்கள் தேவை. சமூக வலைதள அடிமைத்தனத்தால் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது.
‘வீ தி லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கில் இதுவரை 8 லட்சம் மரங்கள் நடப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.போதைப்பொருள் ஒழிப்பில் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அதன் தேவையை முற்றிலுமாக ஒழிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். சட்டமன்றம் என்பது ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அது தனிநபர் மோதல்கள் நிறைந்த ‘டிராமா மன்றமாக’ மாறிவிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.