ITR Filling: “இந்த” 7 விஷயங்கள் ரொம்பவே முக்கியம்.. சின்ன தவறு செய்தாலும் பெரிய அபராதம் விழும்! | ITR Filing 2026: What are the seven Common Mistakes That Can Lead To Penalties And Delayed Refunds

Spread the love

Business

oi-Vigneshkumar

டெல்லி: வருமான வரி தாக்கல் செய்வது பலருக்கும் ஆண்டுதோறும் செய்யும் வழக்கமான பணியாக இருந்தாலும், அதில் செய்யப்படும் சிறிய தவறுகள்கூட பெரிய அபராதம், நோட்டீஸ் அல்லது ரீஃபண்ட் தாமதம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்தாண்டு வருமான வரி தாக்கல் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வரி செலுத்துவோர் தவிர்க்க வேண்டிய 7 முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படியிருக்கும்போது நாம் அதை கவனமாக பில் செய்ய வேண்டும். ஆனாலும், சிலர் தெரியாமல் செய்யும் சிறு தவறுகள் கூட அவர்களுக்கு பெரிய அபராதத்தை பெற்று தந்துவிடுகிறது. ஐடி தாக்கல் செய்யும்போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்!

ITR Filing income income tax

1. தாமதம்

பலர் கடைசி நேரம் வரை காத்திருந்து வருமான வரி தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப குளறுபடிகள் தொடங்கி பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். ஒருவேளை கடைசி நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால் ITR தாமதமாக தாக்கல் செய்தால்.. அதற்கு தனியாக அபராதம் விதிக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234Fன் கீழ் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் அபராதம் ரூ.1,000ஆக குறையும்.

2 வருமானம்

சம்பளம் மட்டுமின்றி வங்கி வட்டி, வாடகை வருமானம், பங்குச் சந்தை லாபம், ஃப்ரீலான்ஸ் செய்து ஈட்டும் பணம் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் சரியாக குறிப்பிட வேண்டும். வருமானத்தை குறைவாகக் காட்டினால் 50% வரை அபராதம் விதிக்கப்படலாம். வேண்டுமென்றே தகவலை மறைத்தது அல்லது தவறான டிடக்ஷன்களை கோரியது கண்டறியப்பட்டால் அபராதம் 200% வரை உயரக்கூடும்.

3 டிடிஎஸ்

டிடிஎஸ் அதாவது Tax Deducted at Source அல்லது டிசிஎஸ் அதாவது Tax Collected at Source தொடர்பான அறிக்கைகளை தாமதமாக தாக்கல் செய்வதும் உங்களுக்கு தான் பிரச்சினையாக மாறும். இதற்காக தினமும் ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்படலாம். அதேநேரம் இந்த அபராதம் செலுத்த வேண்டிய TDS அல்லது TCS தொகையை மீற முடியாது என்பது சற்றே ஆறுதல்.

4 பிஸ்னஸ் செய்வோர்

பிஸ்னஸ் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் வரவு செலவு கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். கணக்கு புத்தகங்களை உரிய முறையில் பராமரிக்க தவறினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். குறிப்பிட்ட வருமானத்தை தாண்டினால் ஆடிட் எனப்படும் தணிக்கை கட்டாயமாகும். அந்த ஆடிட் கட்டாயம் செய்ய வேண்டியவர்கள், அதை செய்யாமல் விட்டால் வருவாயின் 0.5% அல்லது அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

5 மேட்ச் ஆக வேண்டும்

ஏஐஎஸ் (Annual Information Statement), பார்ம் 26AS மற்றும் பார்ம் 16 ஆகியவற்றில் உள்ள தகவல்கள் ஒரே போல மேட்ச் ஆகிறதா என்பதை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். இதில் முரண்பாடுகள் இருந்தால் வருமான வரித்துறையிலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வரலாம். மேலும் ரீஃபண்ட் பெறுவதிலும் தாமதம் ஏற்படலாம்.

6 ரிவைஸ் ரிட்டர்ன்

ஏற்கனவே தாக்கல் செய்த ஐடிஆரில் தவறு இருந்தால் ரிவைஸ்ட் ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம். ஆனால் இதையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய வேண்டும். காலதாமதமாகத் தாக்கல் செய்தால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

7 முக்கியம்

ITR-1, ITR-2, ITR-3, ITR-4 என பல்வேறு படிவங்கள் உள்ளன. உங்களுக்கு எது பொருந்துமா அதை சரியாக தேர்வு செய்து தாக்கல் செய்ய வேண்டும். தங்களுக்குப் பொருந்தாத படிவத்தை தேர்வு செய்து தாக்கல் செய்தால் அந்த விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பழைய வரி முறை, புதிய வரி முறை ஆகியவற்றை ஒப்பிட்டு சரியான முறையை தேர்வு செய்யாமல் தாக்கல் செய்தால் தேவையற்ற கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழல் உருவாகலாம்.

எனவே இந்தாண்டு வருமான வரி ரிட்டரன் தாக்கல் செய்வதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, வருமான விவரங்களை முழுமையாக பதிவு செய்து, சரியான படிவத்தை தேர்வு செய்வது மிகவும் அவசியம். அப்போது தான் அபராதம், நோட்டீஸ் மற்றும் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *