திருவெறும்பூரில், ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் கரசாமி (தனுஷ்), போலீஸிடம் சிக்கிக்கொள்கிறார். பிறகு, போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தன் மனைவி செல்லியுடன் (மமிதா பைஜூ) ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிறார். அங்கு திருந்தி நல்லவனாக வாழ்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கும் அவர், கையில் போதுமான பணம் இல்லாததால், சொந்த ஊரிலிருக்கும் நிலத்தை விற்றுவிட நினைக்கிறார். அதற்காகச் சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு வருகிறார்.

அங்கு ஏற்கெனவே அவருடைய தந்தை அந்த நிலத்தை அடமானம் வைத்து, வாங்கிய டிராக்டருக்கு வட்டி பணம் செலுத்த முடியாத சிக்கலில் இருக்கிறார். இதனை விற்றுவிட நினைக்கும் கரசாமியின் முடிவுக்கு அவருடைய தந்தை கந்தசாமி (கே. எஸ். ரவிக்குமார்) மறுப்பு தெரிவிக்கிறார்.
இதன் பிறகு கரசாமி என்ன செய்கிறார், இதனையடுத்து அவருக்கு ஏற்படும் இடையூறுகள் என்ன, இறுதியில் அவருடைய வாழ்க்கை எதன் பக்கம் செல்கிறது என்பதுதான் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் இந்த ‘கர’ படத்தின் கதை.
திருடனாக, ‘க்ரே ஷேட்’ கொண்ட கதாபாத்திரத்தில் தனுஷ், இறுக்கமான முகபாவனையை இறுதிவரை கடைப்பிடிக்கிறார். தேவைக்குப் பணமின்றித் தவிக்கும் ஒருவனுக்கு வரும் புற அழுத்தம், அதனால் ஆபத்து நிறைந்த களத்தில் அவர் ஆடும் ஆட்டம் என கரசாமிக்கு உயிரூட்டியிருக்கிறார் தனுஷ். மனைவி, மாமாவிடம் கலங்கிய கண்களோடு ஆக்ரோஷமாகப் பேசும் இடங்களில், கரசாமியின் அழுத்தம் நிறைந்த மனவோட்டத்தைப் பார்வையாளர்களுக்கும் கடத்திவிடுகிறார்.
குறைவான திரை நேரத்தில் வந்தாலும், செல்லியாக அழுத்தம் திருத்தமான நடிப்பைத் தந்து போகிறார் மமிதா பைஜூ. தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நோக்கத்திலேயே இருக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு.

பழிதீர்க்கும் எண்ணத்தோடு திருடனைத் துரத்தும் இந்தக் காவல் அதிகாரியின் நடிப்பிற்குத் தோள்களில் பேட்ஜ்களைக் குத்திவிடலாம்.
மாமா காசி மாயனாக கருணாஸ், கரசாமியின் வேட்டைக்குப் பக்கபலமாக இருக்கும் கதாபாத்திரம். கோபம், பதைபதைப்பு என அவருக்கென வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு இவர் நியாயம் சேர்த்திருக்கிறார்.
பணத்தை அடையும் நோக்கத்தில், நயவஞ்சகம் செய்யும் கதாபாத்திரத்தில் ஜெயராம், வெறுப்பையும் லட்சக்கணக்கில் அள்ளிக்கொள்கிறார். தந்தையாகக் கே.எஸ். ரவிக்குமார் எமோஷனலாக பல இடங்களில் ஸ்கோர் செய்பவர், சில இடங்களில் ஜஸ்ட் பாஸ் மட்டுமே வாங்குகிறார். தாயாராக வரும் ஸ்ரீஜா ரவி, எமோஷனல் நடிப்பில் நல்லதொரு டச் தந்திருக்கிறார்.
வெக்கை வீசும் பரப்பு, அங்கு இருக்கும் தரிசு நிலம் எனத் தேர்ந்த லைட்டிங் மற்றும் சட்டகங்களால் இந்தப் பீரியட் உலகத்தை வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
குடும்ப சென்டிமென்ட், தந்தைக்காக கரசாமி செய்யும் செயல்கள் எனப் படத்தைப் பிரித்த படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங், அதனைக் கூர்மையாக்கிக் கதை சொல்லத் தவறியிருக்கிறார்.

வின்டேஜ் துப்பாக்கிகள், குண்டுகள், வங்கிக் கட்டங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு அமைப்புகள், ‘மைக்கேல் மதன காமராஜன்’ போஸ்டர், ‘தேவர் மகன்’ படப்பிடிப்பு என இந்தப் பீரியட் படத்திற்குக் கலை இயக்குநர் மாயபாண்டி செய்திருப்பது மெச்சத்தக்கச் செயல்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த பாடல்களில் ‘வாயா ஏன் கரசாமி’ பாடல், ஆரத்தி எடுத்து கரசாமிக்கு அருள் ஏற்ற, ‘கண்ணம்மா கண்ணம்மா’, ‘ஐயா ஐயா’ பாடல்கள் பருத்தி போல் மென்மையாகச் சாந்தப்படுத்துகின்றன. ஆனால், பின்னணி இசையில், துடிப்பும், தாக்கமும் ஏற்படுத்தாதது ஏமாற்றமே!
திருடனாக இருந்து, திருந்தி நல்லவனாக வாழ நினைக்கும் ஒருவன், பொருளாதார நிலை அவனுக்குள் உண்டாக்கும் அழுத்தம், அதன் பிறகு தனக்காகவும் ஊர் மக்களுக்காகவும் அவன் எடுக்கும் அவதாரம் என இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்த ‘கர’ படத்திற்கு இறுக்கமான முடிச்சுகள் போட்டு நகர்த்தியிருக்கிறார்.
தொடக்கத்தில், ‘கரசாமி’ கதாபாத்திரத்தைப் பற்றிய பெரிய விவரணைகள் தராமல் நேரடியாகக் கதைக்குள் செல்லும் படம், பொருளாதாரச் சூழல் ஒருவனுக்குள் எப்படியான அழுத்தத்தை, கோபத்தை, பயத்தை ஏற்படுத்துகிறது, அது அவனை எப்படியான முடிவுகள் பக்கம் நகர்த்துகிறது என்பதையும் பதிவு செய்கிறது.

ஆனால், முதல் 20 நிமிடத்திற்குப் பிறகான திரைக்கதை, குடும்ப கதையாக மிகத் தட்டையாகவே நகர்வது லேசாக அசதியை உண்டாக்குகிறது.
ஆங்காங்கே, இந்தக் குடும்ப சென்டிமென்ட் கதை நம்மை எமோஷனல் ஆக்கினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் நீட்டி நெளித்துச் சொல்வது போன்ற மனநிலையை உருவாக்குகிறது.
இப்படியாக நகரும் முதல் பாதி, நல்ல டீடைலிங் தந்து எழுதப்பட்டிருக்கும் இடைவேளையை எட்டுகிறது. அந்த வங்கியில் திருடும் காட்சி நல்லதொரு திரையனுபவம்!
இரண்டாம் பாதியில் முளைக்கும் கிளைக் கதைகள், அதிலிருந்து கரசாமிக்கு வரும் சிக்கல்கள் என்பதாகச் சொல்லப்படும் கதை கொஞ்சம் பரபர உணர்வை ஏற்படுத்தி, திரைக்கதையையும் பார்வையாளர்களையும் நிமிரச் செய்கின்றன.
முதல் பாதியில் சிலவற்றிற்கு சிறிய லீட் தந்து, அதற்கு இரண்டாம் பாதியில் நியாயம் சேர்க்கும் காட்சிகளை அமைத்தது, திரைக்கதையாசிரியர்கள் ஆல்ப்ரெட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜாவின் மேஜிக்!
ஆனால், திருடனைத் துரத்தும் சுராஜின் கதாபாத்திரம், நடந்தவை, நடக்கப்போகும் விஷயங்களை, தடயங்களே இல்லாமல் அனைத்தையும் கண்டுபிடிப்பதற்குப் பின்னிருக்கும் லாஜிக் எங்கே சாரே?!

திடீரெனக் காணாமல் போகும் கருணாஸ் கதாபாத்திரம், சுலபமாக அனைத்து வங்கிகளையும் கொள்ளையடிப்பது என க்ளைமாக்ஸில் லாஜிக் மற்றும் பின்னணிக் காரணங்களைத் தொலைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கரசாமி.
அதுபோக இயக்குநர் லோனே வாங்கவேண்டாம் என்கிறாரா, டிராக்டர் என்ற தொழில்நுட்பத்தையே வெறுக்கிறாரா, அல்லது வங்கிகளில் வெளிப்படைத்தன்மை தேவை என்கிறாரா எனப் பல்வேறு குழப்ப ரேகைகள்!
திருடனாக இருந்தவன், ஊர் மக்களின் கஷ்டங்களைத் தீர்த்து வெளிச்சம் உண்டாக்குகிறான் என்கிற பிரமாதமான லைனைக் கொண்டிருக்கிறது இந்த ‘கர’. ஆனால், அது முழு நீளத் திரைக்கதையாகக் கச்சிதமாக விரிந்திருந்தால், இந்த ‘கர’ தடுமாறாமல், கரை சேர்ந்திருக்கும்.