ஆம்புலன்ஸ் கூட வர முடியாது !
சாலை வசதியின்மை இவர்களின் அன்றாடப் போக்குவரத்தை மட்டுமல்ல, அவசர கால வாழ்வாதாரத்தையும் சேர்த்தே முடக்கியுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள் வர முடியாத சூழலே நிலவுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வேண்டும் என்றாலும் அரை கிலோமீட்டர் தூரம் சுமந்து வர வேண்டியுள்ளது. தபால்காரர், பால் வியாபாரிகள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் தினமும் படும் அவஸ்தை சொல்லி மாளாது. அவசர காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதுதான் எங்களின் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது என்கின்றனர் ஊர் மக்கள்
மனு மேல் மனு… தீர்வுதான் இல்லை !
பிரச்சினை குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த 22.09.2025 அன்று மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், பாதையை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைத்துத் தரக் கோரியுள்ளனர். மனுவுடன் சர்வே வரைபடம் மற்றும் ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
“எங்கள் வீடுகளுக்குச் செல்ல ஒரு முறையான பாதை வேண்டும் என்பதைத் தவிர வேறு பெரிய கோரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. பல தலைமுறையாக மனு கொடுத்து வருகிறோம், எங்களின் அவல நிலைக்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும் ?” என்பதே மக்களின் கேள்வி !
அதிகாரிகள் தரப்பு சொல்வது என்ன ?
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, “அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலரின் குறுகிய மனப்பான்மையே இதுபோன்ற பிரச்சினைகளுக்குக் காரணம். மீண்டும் அந்தப் பகுதியை முறையாக அளவீடு செய்ய அரசுக்கு மனு அளிக்கப்பட்டால், நிலத்தை அளந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.