Mamata Banerjee’s Party Functionary Who Buried Rs 2 Crore in Sacks Underground-ரூ.2 கோடியை சாக்குமூட்டையில் கட்டி மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகி

Spread the love

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி மறு ஆய்வு செய்து வருகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியா நகராட்சி தலைவர் தீபன்கர் பட்டாச்சாரியா வீட்டில் இருந்து ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திபன்கர் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தியதில் அவரது வீட்டில் இருந்து ரூ.80 லட்சம் மற்றும் அரசு நிவாரண பணிகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரம் தார்ப்பாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தீபன்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பணத்தை பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

உடனே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை அவரது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பண்ணை வீட்டிற்கு வெளியில் ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில்தான் பணத்தை புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் அந்த இடத்தை தோண்டினர். நீண்ட நேர தோண்டுதலுக்கு பிறகு சாக்குமூட்டைகள், டிராலி பேக்கள் உள்ளே புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் முழுவதும் பணம் இருந்தது. அனைத்துமே 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். சாக்கு மூட்டைகள் மற்றும் டிராலி பேக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அவை அனைத்தும் தண்ணீர் புகாத அளவுக்கு மிகவும் இறுக்கமாக மூடப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. சில சாக்குமூட்டையில் சொத்து ஆவணங்களும் இருந்தது. அனைத்தையும் தோண்டி எடுக்க பல மணி நேரம் பிடித்தது. பணத்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்று எண்ணிப்பார்த்தபோது 2.24 கோடி இருந்தது தெரிய வந்தது.

வேறு எங்காவது பணம் அல்லது பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய ட்ரோன் மூலம் பட்டாச்சாரியாவின் பண்ணை வீடு முழுக்க ஆய்வு செய்யப்பட்டது. பட்டாச்சாரியாவின் உதவியாளர் சமீம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுகள் மம்தா பானர்ஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.கவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *